சிரிய விமானத் தாக்குதலில் 42 குழந்தைகள் பலி
கெய்ரோ: பேரல் குண்டுகளை சிரிய விமானப்படையினர் சரமாரியாக வீசித் தாக்கியதில் 42 குழந்தைகள் பரிதாபமாக கொல்லப்பட்டன.
கடந்த 36 மணி நேரத்தில் இந்த உயிர்ப்பலி ஏற்பட்டுள்ளதாக சிரிய மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.
நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பேரல் குண்டுகளை சிரிய விமானங்கள் வீசித் தாக்குதல் நடத்தியதாக இந்த அமைப்பு கூறியுள்ளது. இவற்றில் பெரும்பாலானவை வடக்கு சிரியாவில் உள்ள ரக்கா, பின்ஸ், அல் அபித், கான் ஷயாகுன், சராகிப் மற்றும் அலெப்போ ஆகிய நகரங்கள் மீது வீசப்பட்டன.
மேலும் டயேல், மொஹசான், அல் ரஸ்தான், அல் ஹூலா ஆகிய நகரங்களும் கூட தாக்குதலுக்குள்ளாகியுள்ளன.
ஐ.நா. புள்ளிவிவரப்படி, சிரியாவில் கடந்த 2011ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் 2014 ஏப்ரல் மாதம் வரை உள்நாட்டுப் போரில், 1 லட்சத்து 90 ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதில் 9000 பேர் சிறார்கள் ஆவர்.
2011 மார்ச் மாதம் முதலே உள்நாட்டுப் போரில் சிக்கித் தவிக்கிறது சிரியா. இதில் சிக்கி பல லட்சம் பேர் அகதிகளாக லெபனானில் தஞ்சம் புகுந்துள்ளனர். சிரிய அரசுப் படையினரும், போராட்டக்காரர்களும் மோதி வரும் நிலையில், சிரியாவின் சில பகுதிகளை ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளும் பிடித்து வைத்துள்ளது நிலைமையை மிகவும் மோசமாக்கியுள்ளது.