காஸாவில் 469 பிஞ்சு குழந்தைகள் படுகொலை: யுனிசெப்
ரமல்லா: பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் இஸ்ரேல் நடத்திய இனப்படுகொலையில் 469 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையில் குழந்தைகள் மேம்பாட்டு அமைப்பான யுனிசெப் தெரிவித்துள்ளது.
காஸா பகுதியை நிர்வகித்து வரும் ஹமாஸ் இயக்கத்தினரை அழிக்கிறோம் என்ற போர்வையில் பாலஸ்தீனர்களை பூண்டோடு அழிக்கும் வகையில் கொடுந்தாக்குதலை இஸ்ரேல் நடத்தி வருகிறது.
கடந்த ஒரு மாத காலத்துக்கும் மேலாக இஸ்ரேல் நடத்தி வரும் இத்தாக்குதலில் சுமார் 2 ஆயிரம் பலியாகி உள்ளனர். மொத்தம் 10 ஆயிரம் பேர் படுகாயமடைந்துள்ளனர்.
சுமார் 3 லட்சம் பேர் அகதிகளாக வாழ்விடத்தை விட்டு வெளியேறி முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர். எகிப்தின் முன்முயற்சியில் அவ்வப்போது யுத்த நிறுத்த ஒப்பந்தங்கள் அறிவிக்கப்படும் மீண்டும் இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதும் தொடர் கதையாகிவிட்டது.
இந்த நிலையில் யுனிசெப் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், இஸ்ரேலின் சமீபத்திய தாக்குதலில் மொத்தம் 469 பிஞ்சு குழந்தைகள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.
இதில் கடந்த 48 மணி நேரத்தில் இஸ்ரேலால் படுகொலை செய்யப்பட்ட 9 குழந்தைகளும் அடக்கம் என்கிறது யுனிசெப் அறிக்கை.
மேலும் காஸா பகுதி குழந்தைகளின் உளவியல் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது என்கிறது யுனிசெப்.