ஜப்பானில் கடலுக்கடியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி வார்னிங் இல்லை!!
டோக்கியோ: ஜப்பான் கடலுக்கடியில் 6.8 ரிக்டர் அளவுகொண்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இருப்பினும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.
கடந்த சில வாரங்களாக உலகை பீதிக்குள்ளாக்கும் வகையில் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. நேபாளத்தை நிலைகுலைய வைத்த நிலநடுக்கத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 10 ஆயிரத்தைத் தாண்டியது.
இந்நிலையில் இந்தியா, சீனா, நேபாளம், ஆப்கான் உள்ளிட்ட நாடுகளின் 82 இடங்களில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் நேபாளம், இந்தியாவில் உயிரிழப்புகள் ஏற்பட்டன.
இந்நிலையில் ஜப்பானிற்கு வடகிழக்கே கடற்பகுதியில் 6.8 ரிக்டர் அளவுகொண்ட நிலநடுக்கம் ஏற்பட்டது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துஉள்ளது. சக்திவாய்ந்த இந்நிலநடுக்கம் ஏற்பட்ட போதிலும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை.
இந்நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்தான உடனடி தகவல்கள் வெளியாகவில்லை. ஹோன்சு தீவு அருகே கடற்பகுதியில், 38.9 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டு இருந்தது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கடந்த 2011-ம் ஆண்டு ஜப்பானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக சுனாமி அலைகள் தாக்கியது. இச்சம்பவத்தில் 18 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். புகுஷிமா அணு உலையில் பாதிப்பு ஏற்பட்டு கதிரியக்க கசிவு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.