சவுதியில் சாலை விபத்தில் 3 தமிழர்கள் உள்பட 6 பேர் பலி
ரியாத்: சவுதி அரேபியாவில் உள்ள அல்ஹஸ்ஸா நெடுஞ்சாலையில் நடந்த விபத்தில் 3 தமிழர்கள் உள்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
சவுதி அரேபியாவின் அல்ஹஸ்ஸாவில் உள்ள அல்முக்தி என்னும் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த 9 தொழிலாளர்கள் ரியாத்தில் உள்ள தலைமை அலுவலகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டனர். இதையடுத்து அவர்கள் கடந்த 22ம் தேதி நள்ளிரவில் நிறுவனத்திற்கு சொந்தமான வாகனத்தில் ரியாத் கிளம்பினர். வாகனத்தை எகிப்து நாட்டைச் சேர்ந்தவர் ஓட்டினார்.
அவர் தூக்க அசதியில் இருந்ததால் வாகனம் விபத்துக்குள்ளானது. இதில் வாகனத்தில் இருந்த தமிழகத்தைச் சேர்ந்த ராமநாதன்(30), விஜயராகவன்(23), வினோத்(25), ஆந்திராவை சேர்ந்த யாத கிரி(32), ஹாஜா கான்(40) உள்ளிட்ட 5 இந்தியர்களும், யாசீன்(26) என்ற எகிப்தியரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
தமிழ்நாட்டை சேர்ந்த மற்ற மூன்று நபர்கள் பலத்த காயத்துடன் கிங் பஹத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த இந்தியன் சோஷியல் ஃபோரம்(ISF)அல்ஹஸ்ஸா கிளையின் பொதுச் செயலாளர் யூசுப்கான் மற்றும் சமூக நலத்துறை செயலாளர் முகம்மது அலி ஆகியோர் இறந்தவர்களின் சடலங்களை தாயகத்திற்கு அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.