திறந்தவெளியில் மலம் கழிப்பவர்கள்... உலகளவில் 60 % பேர் இந்தியர்களாம்!
வாஷிங்டன்: உலகளவில் திறந்தவெளியில் மலம் கழிப்பவர்களில் 60 சதவீதம் பேர் இந்தியாவில் வாழ்வதாக உலக சுகாதார அமைப்பு அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.
திறந்தவெளியில் மலம் கழிப்பது சுகாதாரக் கேடான காரியம் மட்டுமல்ல, இன்றைய சூழலில் பாதுகாப்பாற்ற ஒன்றாகவும் விளங்குகிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர், உத்திரப்பிரதேசத்தில் இரவில் இயற்கை உபாதையைக் கழிக்கச் சென்ற இரண்டு சகோதரிகள் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டது பரபரப்பை உண்டாக்கியது.
இந்நிலையில், நேற்று ராஜ்யசபாவில் பேசிய குடிநீர் மற்றும் சுகாதாரத்துறை மத்திய இணையமைச்சர் உபேந்திரா, உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றை சுட்டிக் காட்டினார்.
60% பேர்....
அந்த அறிக்கையில் படி, உலகளவில் திறந்தவெளியில் மலம் கழிப்பவர்களில் 60% பேர் இந்தியாவில் வசிப்பதாக அவர் தெரிவித்தார்.
நிர்மல் பார்த் அபியான் திட்டம்...
மேலும், மத்திய அரசு ‘நிர்மல் பாரத் அபியான்' திட்டத்தை மாநில அரசுகள் மூலமாக துரிதப் படுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
விழிப்புணர்வு...
அதேபோல், திறந்தவெளிகளில் மலம் கழிப்பதை ஒழித்துக் கட்ட, குறிப்பாக கிராமங்களில் கழிவறைகள் கட்டுவதற்கான விழிப்புணர்வை மக்கள் மத்தியில் உண்டாக்க வேண்டும்' என அவர் தெரிவித்தார்.
முக்கிய நோக்கம்...
நிர்மல் பாரத் அபியான் திட்டத்தின் முக்கிய நோக்கமே சுகாதாரமான கழிவறைகளை நாடு முழுவதும் உண்டாக்குவது தான் என்பது குறிப்பிடத்தக்கது.