மோடியைப் பிரதமராக்க விரும்பும் ‘பாகிஸ்தான்’ கிராம மக்கள்...
புர்னியா: இந்தியாவின் அடுத்த பிரதமராக மோடி வர வேண்டும் என பீகார் அருகே உள்ள பாகிஸ்தான் கிராம மக்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
16வது லோக்சபாவிற்கான தேர்தல் நடந்து வருகிறது. இது தொடர்பாக நடத்தப் பட்ட கருத்துக்கணிப்பில் இத்தேர்தலில் பாஜக அதிக இடங்களைப் பிடிக்கும் என தெரிய வந்துள்ளது. இதற்கிடையே பீகார் மாநிலத்திற்கு அருகேயுள்ள கிராமம் ஒன்றும் மோடிக்கு தான் தங்களது ஆதரவு எனத் தெரிவித்துள்ளது.
பீகார் மாநிலம் புர்னியாவில் இருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கிராமத்தின் பெயர் தான் ‘பாகிஸ்தான்'. இக்கு சுமார் 250 குடியிருப்புகள் உள்ளன. சுமார் 100 வாக்குகளை உடைய இந்த கிராம மக்கள் இந்தியாவின் அடுத்த பிரதமராக மோடி தான் வர வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளனர்.
எந்தவொரு அடிப்படை வசதிகளும் இல்லாத இக்கிராமத்தினர் மோடி பிரதமரானால் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றுவார் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இந்த கிராமத்தில் எந்த இஸ்லாமியரும் இல்லை, மசூதியும் இல்லை. இங்கு பெரும்பாலும் சந்தால் பழங்குடி குடும்பங்களே உள்ளன. அமைதியை சீர்குலைக்க முயற்சித்துவரும் அண்டை நாடான பாகிஸ்தானுக்கு பாடம் புகட்ட மோடி பிரதமர் ஆக வேண்டும் என்று விரும்புகிறோம் என அக்கிராமத்து மக்கள் கூறியுள்ளனர்.
புர்னியாவில் வருகிற 24ம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது.