'எபோலா' காய்ச்சலுக்கு அமெரிக்கா அளித்த மருந்து நன்றாக வேலை செய்கிறது: லைபீரிய அரசு
மான்ரோவியா: எபோலா காய்ச்சலுக்கு அமெரிக்கா லைபீரியாவுக்கு அளித்த இசட்மாப் மருந்து சோதனை அடிப்படையில் 3 டாக்டர்களுக்கு அளிக்கப்பட்டது. இதையடுத்து அவர்களின் உடல் நிலையில் தற்போது நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக லைபீரிய அரசு தெரிவித்துள்ளது.
மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் உயிர் கொல்லியான எபோலா வைரஸ் பரவி வருகிறது. அதில் குறிப்பாக லைபீரியாவில் தான் எபோலாவின் தாக்கம் அதிகம் உள்ளது. லைபீரியாவில் எபோலா வைரஸ் தாக்கி 413 பேர் பலியாகினர். இந்நிலையில் வைரஸால் புதிதாக தாக்கப்பட்ட 101 பேரில் 53 பேர் பலியாகியுள்ளனர். இதன் மூலம் லைபீரியாவில் எபோலா காய்ச்சலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 466 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் லைபீரிய அதிபர் எல்லன் ஜான்சன் சர்லீஃபின் வேண்டுகோளை ஏற்று அமெரிக்கா எபோலா காய்ச்சலுக்கு தான் தயாரித்த மருந்தான இசட்மாப்பை அனுப்பி வைத்தது. அந்த மருந்து சோதனை அடிப்படையில் எபோலா காய்ச்சலால் அவதிப்படும் 3 லைபீரிய டாக்டர்களுக்கு அளிக்கப்பட்டது. மருந்தை எடுத்துக் கொண்ட டாக்டர்களின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக லைபீரிய அரசு தெரிவித்துள்ளது.
எபோலா காய்ச்சலுக்கு மருந்தே இல்லை என்பதால் பீதியில் உள்ள மக்களுக்கு இந்த தகவல் ஆறுதல் அளித்துள்ளது.
எபோலா வைரஸ் தாக்கி இதுவரை 1, 299 பேர் பலியாகியுள்ளனர் என்று ஐ.நா. தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.