மாயமான அல்ஜீரிய விமானம் விபத்துக்குள்ளானது: மாலி - நைஜர் எல்லையில் விழுந்ததாக தகவல்!
அல்ஜியர்ஸ்: 110 பயணிகளுடன் அல்ஜீரிய நாட்டின் விமான நிறுவனமான ஏர் அல்ஜிரி விமானம், நைஜர் - மாலி எல்லைப் பகுதியில் விபத்துக்குள்ளானதாக அல்ஜீரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விமானம் மாலி நாட்டின் மீது பறந்தபோது நைஜர் எல்லையில் விபத்துக்குள்ளாகியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. சம்பவ இடத்திற்கு இரண்டு பிரெஞ்சு மீட்பு விமானங்கள் விரைந்துள்ளன.
மேற்கு ஆப்பிரிக்க நாடான புர்கினா ஃபோசாவின் தலைநகர் அவாகடோகு நகரில் இருந்து ஏர் அல்ஜிரி விமானம் ஒன்று அல்ஜீரிய நாட்டின் அல்ஜியர்ஸ் நகருக்கு கிளம்பியது. ஏஎச்5017 என்ற இந்த விமானத்தில் 110 பயணிகளும் 6 ஊழியர்களும் இருந்தார்கள். அந்த விமானம் கிளம்பிய 50வது நிமிடத்திற்கு பிறகு அல்ஜீரியாவின் தரை கட்டுப்பாட்டு மையம் மற்றும் ரேடாருடனான தொடர்பு துண்டிக்கப்பட்டுவிட்டது.
இதையடுத்து விமானத்தை தேடும் பணியில் அல்ஜீரிய அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டனர்.
இந்த விமானம் இரு நகரங்களுக்கு நடுவே ஆப்பிரிக்காவின் மாலி நாட்டை கடந்து செல்வது வழக்கம். அங்கு தனி நாடு கேட்டு பல ஆண்டுகளாக தீவிரவாதிகள் தாக்குதல்களை நடத்தி வருகிறார்கள். எனவே அந்த தீவிரவாதிகள், உக்ரைனில் மலேசிய விமானத்தின் மீது நடத்திய தாக்குதலை போல அல்ஜீரிய விமானம் மீதும் தாக்குதல் நடத்தியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டது.
இந்த நிலையில் தற்போது மாலி - நைஜர் எல்லையில் விமானம் விபத்துக்குள்ளானதாக அல்ஜீரியாவிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விமானம் விபத்துக்குள்ளானதை மட்டும் உறுதிப்படுத்தியுள்ள அல்ஜீரிய அதிகாரிகள் மேல் விவரம் தெரியவில்லை என்று கூறியுள்ளனர். இந்த விமானத்தில் பயணித்தவர்களில் பாதிப் பேர் பிரான்ஸைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
விபத்துக்குள்ளானதாக கருதப்படும் பகுதிக்கு 2 பிரான்ஸ் போர் விமானங்கள் அனுப்பப்பட்டுள்ளன. இவை விமானம் கீழ விழுந்து கிடக்கும் பகுதியை அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.
மேலும், நைஜர் பாதுகாப்புப் படையினரும் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர். மாலி எல்லைப் பகுதிக்கு மீட்புப் படைகளை அனுப்பியுள்ளதாக நைஜர் தெரிவித்துள்ளது. விபத்தில் சிக்கிய விமானம் ஸ்பெயினைச் சேர்ந்த நிறுவனத்திற்குச் சொந்தமானதாகும்.
மாலியின் வடக்குப் பகுதியில் ஏற்பட்ட கடும் சூறாவளியில் விமானம் சிக்கி விபத்துக்குள்ளாகியிருக்கும் என்று மாலி அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
விமானத்தில் இருந்தவர்களில் 50 பேர் பிரான்ஸைச் சேர்ந்தவர்கள். 24 பேர் புர்கினோ புசோவைச் சேர்ந்தவர்கள். 8 பேர் லெபனான் நாட்டவர். 4 பேர் அல்ஜீரியர்கள், 2 பேர் லக்ஸம்பர்க்கைச் சேர்ந்தவர்கள். பெல்ஜியம், ஸ்விட்சர்லாந்து, நைஜீரியாவைச் சேர்ந்தவர்கள் தலா ஒருவர் ஆவர். இவர்கள் தவிர காமரூன், உக்ரைன் ருமேனியா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களும் தலா ஒருவர் இருந்துள்ளனர்.
6 விமான ஊழியர்களில் அனைவருமே ஸ்பெயினைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
4வது பெரும் விபத்து
சமீப மாதங்களில் உலக அளவில் நடைபெற்றுள்ள 4வது பெரிய விமான விபத்தாக இந்த அல்ஜீரிய விமானம் சேர்ந்துள்ளது. இதற்கு முன்பு மலேசியன் ஏர்லைன்ஸின் எம்எச் 370 மாயமாகிப் போனது. அடுத்து உக்ரைன் மீது பறந்த மலேசியன் ஏர்லைன்ஸின் எம்எச் 17 சுட்டு வீழ்த்தப்பட்டது. 295 பேர் பலியானார்கள். தைவானில் ஏற்பட்ட சூறாவளியில் சிக்கி ஒரு விமானம் விபத்துக்குள்ளானது. தற்போது ஆப்பிரிக்காவில் விமான விபத்து நடந்துள்ளது.