ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளுடன் இணைந்து செயல்பட்ட அமெரிக்கர் சுட்டுக் கொலை
லாஸ் ஏஞ்செலஸ்: சிரியாவில் தங்கியிருந்து ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளுடன் இணைந்து செயல்பட்ட அமெரிக்கர் ஒருவரை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றுள்ளனர். அந்த நபரின் பெயர் டக்ளஸ் மெக்காத்தர் மெக்கெய்ன். இவரது கொலையை அமெரிக்க அரசு உறுதி செய்துள்ளது.
இந்த நபர் சிரியாவில் தங்கியிருந்தார். ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்புடன் இணைந்து செயல்பட்டு வந்தார். இவரது மரணம் உறுதி செய்யப்பட்டுள்ளது என்று அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தித் தொடர்பாளர் கெய்த்லின் ஹெய்டன் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், தீவிரவாத அமைப்புகளுடன் எந்த தனி நபரும் இணைய வேண்டாம் என்று அறிவுறுத்துகிறோம். அப்படிப்பட்டவர்கள் மீண்டும் இயல்பான வாழ்க்கைக்குத் திரும்ப வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம் என்றார்.
மெக்கெய்னின் உடலை திரும்ப அமெரிக்காவுக்குக் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன. அவரது குடும்பத்தினருக்கும் அமெரிக்க தூதரகம் இதுதொடர்பாக உதவி வருகிறது.
மெக்கெய்னின் தீவிரவாத தொடர்புகள் குறித்து அவரது குடும்பத்தினர் கவலையுடன் இருந்து வந்தனர். பல ஆண்டுகளுக்கு முன்பே கிறிஸ்தவரான மெக்கெய்ன், இஸ்லாமுக்கு மாறி விட்டதாக அவரது உறவினர் கென் மெக்கெய்ன் கூறினார். மேலும் துருக்கி வழியாக அவர் சிரியாவுக்கும் சென்றார். அங்கிருந்தபடி ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் ஜிஹாத் போரில் பங்கேற்று வந்தார்.
அமெரிக்க உளவுத்துறை புள்ளிவிவரப்படி கிட்டத்தட்ட 7000 வெளிநாட்டினர், அவர்களில் பலர் அமெரிக்கர்கள், சிரியாவில் தீவிரவாதிகளாக உலா வருவதாக கூறுகிறது. மேலும் சிரியாவில் மட்டும் கிட்டத்தட்ட 23,000 மிக பயங்கரமான தீவிரவாதிகள் இருப்பதாகவும் இந்தக் கணக்கு கூறுகிறது.
மெக்கெய்ன் இல்லினாய்ஸில் பிறந்தவர். அங்கு படிப்பை முடித்த அவர் பின்னர் சான் டியாகோவுக்கு இடம் பெயர்ந்தார். அதன் பின்னர் முஸ்லீமாக மதம் மாறி துருக்கி வழியாக சிரியாவுக்கு வந்து சேர்ந்தார்.