70 ஜடைகளுடன் கூடிய 3300 ஆண்டுகளுக்கு முந்தைய பெண் உடல்... எகிப்தில் கண்டெடுப்பு
கெய்ரோ: எகிப்தில் சுமார் 3300 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த பெண்ணின் உடலை தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அப்பெண் 70 ஜடைகளுடன் கூடிய சிகையலங்காரம் செய்திருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
எகிப்து நாட்டின் புராதன நகரமான அமர்னாவில் நடைபெற்று வரும் அகழ்வாராய்ச்சியின் போது, தொல்லியல் ஆய்வாளர்கள் இப்பெண்ணின் உடலைக் கண்டெடுத்துள்ளனர்.
பொதுவாக எகிப்தில் இறந்தவர்கள் உடலை ‘மம்மி'யாகப் பதப்படுத்தி வைப்பது வழக்கம். ஆனால், இப்பெண்ணின் உடல் அவ்வாறு செய்யப்படவில்லை என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். சாதாரண தரை விதிப்பில் சுற்றப் பட்டிருந்த நிலையில் அப்பெண்ணின் உடல் ஆய்வாளர்களுக்கு கிடைத்துள்ளது.
70 ஜடைகள்...
மேலும், இது தொடர்பாக ஆய்வில் ஈடுபட்ட தொல்லியல் ஆய்வாளர் ஜொலந்தா பாஸ் கூறுகையில், ‘அந்தப் பெண்ணின் தலைமுடி சுருள் சுருளாக மிகவும் சிக்கலான முறையில், சுமார் 70 ஜடைகளாகப் பின்னப்பட்டுள்ளது' எனத் தெரிவித்துள்ளார்.
தொடரும் ஆய்வு...
கிடைக்கப் பெற்றுள்ள பெண் உடலின் வயது மற்றும் இன்னபிற விவரங்கள் குறித்து தொடர்ந்து ஆராய்ச்சி நடைபெற்று வருவதாக ஆங்கில தொல்லியல் ஆய்வு இதழான ‘ஜர்னல் ஆஃப் எகிப்தியன் ஆர்க்கியாலஜி' தெரிவித்துள்ளது.
சிகையலங்காரம்...
இப்பெண்ணின் உடலைப் போலவே அப்பகுதியில் மேலும் சில உடல்களும் சிகையலங்காரம் அழியாத நிலையில் அப்பகுதியில் மீட்கப் பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கருப்புச் சாயம்...
தற்போது மீட்கப் பட்டுள்ள பெண்ணின் தலைமுடி கருப்பு நிற சாயம் பூசப் பட்டிருக்கலாம் என சந்தேகம் தெரிவித்துள்ளனர் ஆய்வாளர்கள். மேலும், ஆதிகாலத்திலேயே நரை முடியை மறைக்க மக்கள் தலைக்கு கருப்பு சாயம் பூசியது இதன் மூலம் உறுதியாவதாக அவர்கள் கூறியுள்ளனர்.
ஜடைக்கான காரணம்...
அதேபோல், இந்த 70 சடைகளுடன் கூடிய சிகையலங்காரம் அப்பெண் இறந்ததற்கு பின் பிரத்யேகமாக செய்யப்பட்டதா அல்லது அப்பெண் வாழ்ந்த காலத்தில் அனைத்துப் பெண்களுமே அத்தகைய சிகையலங்காரம் செய்வதைத் தான் வழக்கமாக வைத்திருந்தார்களா என்பதையும் ஆய்வாளர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.