சிரியாவின் அதிபராக 3வது முறையாக பதவியேற்றார் பஷார் அல் ஆசாத்!!
டமாஸ்கஸ்: சிரியா நாட்டின் அதிபராக மூன்றாவது முறையாக பஷார் அல் ஆசாத் பதவியேற்றார்.
சிரியாவில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக சிரியாவின் அதிபர் பஷார் அல் ஆசாத்தை பதவியில் இருந்து அகற்ற சன்னி முஸ்லிம்களின் ஆயுதப் படையான ஐ.எஸ்.ஐ.எஸ். போரிட்டு வருகிறது. சிரியாவில் சில பகுதிகளையும் இந்த அமைப்பு கைப்பற்றியும் இருக்கிறது.
மிகப் பெரிய அளவிலான உள்நாட்டு யுத்தத்துக்கு நடுவே கடந்த மாதம் சிரியாவில் பொதுத்தேர்தல் நடைபெற்றது. இத் தேர்தலில் 88.7% வாக்குகளைப் பெற்று 3வது முறையாக ஆசாத் அதிபர் பதவியைத் தக்க வைத்துக்கொண்டார்..
ஆனால் சிரியாவின் எதிர்க்கட்சியினரும், மேற்கத்திய நாடுகளும் இத் தேர்தலை போலியானது என்று குற்றம்சாட்டிய நிலையிலும் அந்நாட்டு தேர்தல் ஆணையம் ஆசாத்தின் வெற்றியை அறிவித்தது.
இதைத் தொடர்ந்து அதிபர் பொறுப்பை ஆசாத் நேற்று ஏற்றுக்கொண்ட காட்சியை அந்நாட்டு அரசு தொலைக்காட்சி ஒளிபரப்பியது. சிரியாவின் தலைநகர் டமாஸ்கசில் உள்ள அதிபர் மாளிகையில் அவர் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டார்.
அதிபர் ஆசாத் இஸ்லாமியர்களின் புனித நூலான குர்ஆனில் கை வைத்தபடி நாட்டின் அரசியலமைப்புக்கு மரியாதை செலுத்துவதாக உறுதிமொழி எடுத்துக்கொண்டார்.