சிரியாவில் அமெரிக்காவின் அதிரடி குண்டு மழை.. ஒரே நாளில் 70 ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் காலி!
பெய்ரூட்: அமெரிக்க விமானப்படையினர் சிரியாவில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் நிலைகள் மீது நடத்திய அதிரடி குண்டு வீச்சில் 70 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
வடக்கு மற்றும் கிழக்கு சிரியாவில் செவ்வாய்க்கிழமை அமெரிக்க விமானப்படையினர் அதிரடித் தாக்குதலை மேற்கொண்டனர். இதில்தான் இத்தனை பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்த செய்தியை சிரியா போர் குறித்த தகவல்களை கவனித்து வரும் மனித உரிமை அமைப்பான சிரியா அப்சர்வேட்டரி பார் ஹியூமன் ரைட்ஸ் என்ற அமைப்பு உறுதிப்படுத்தியுள்ளது.
இதுகுறித்து அந்த அமைப்பின் ரமி அப்துல் ரஹ்மான் கூறுகையில், உயிர்ப்பலி மேலும் அதிகமாக இருக்கும் என்றே கருதுகிறோம். 70 என்பது குறைந்ததுதான், உண்மையில் இதை விட அதிக அளவிலான தீவிரவாதிகள் பலியாகியிருப்பார்கள் என்று கருதுகிறோம் என்றார்.
ரக்கா, டெயர் அல் ஸோர், ஹஸகா ஆகிய பகுதிகளில்தான் அதிக அளவில் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்தப் பகுதிகளை தீவரவாதிகள் தான் தங்களது வசம் வைத்துள்ளனர்.
மேலும் காயமடைந்தோர் எண்ணிக்கை 300க்கு மேல் இருக்கும் என்றும் ரமி கூறியுள்ளார்.