ஜப்பான் நிலநடுக்கமும் சுனாமி தாக்குதலும்: தொடரும் சோகம்…
டோக்கியோ: ஜப்பானில் சரியாக 21 ஆண்டுகள் கழித்து அதே நாளில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டு சுனாமி தாக்கியுள்ளது.
ஜப்பானில் நில நடுக்கம் ஏற்படும், அதைத் தொடர்ந்து சுனாமிப் பேரலைகள் எழுவதும் புதிய விசயமல்ல. ஆனால் 21 ஆண்டுகளுக்கு முன்னர் நிலநடுக்கம் ஏற்பட்ட அதே நாளில் மீண்டும் நிலநடுக்கமும், சுனாமியும் ஏற்பட்டிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
1993 ஜூலை 12
கடந்த 1993ம் ஆண்டு ஜப்பானில் 7.8 ரிக்டர் அளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் கடற்கரையோர பகுதியை சுனாமி அலைகள் தாக்கின.
202 பேர் மரணம்
அதில் நோஷிரோ கரையை பெரிதும் பாதிக்கப்பட்டது. அலையின் உயரம் அதிக பட்சமாக 10 மீட்டர் வரை எழுந்தது. இதில் 202 பேர் பலியானார்கள். பெரும் பொருட்சேதம் ஏற்பட்டது.
ஜூலை 12, 2014
அதேபோல சரியாக 21 ஆண்டுகள் கழித்து அதே நாளில் இன்று அதிகாலையில் ஜப்பானின் வடகிழக்கில் புகுஷிமா அணு உலை அமைந்துள்ள மியாகி கடல் பகுதியில் 6.8 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அதிகாலை 5.12 மணிக்கு சிறிய அளவிலான சுனாமி தாக்கியது.
சிறிய சுனாமி அலைகள்
இஷினோமகி மற்றும் மியாகி ஆகிய கடல் பகுதிகளில் 20 செ.மீ அளவுக்கு அலைகள் எழும்பியதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மக்களுக்குப் பாதுகாப்பு
எனினும் மியாகி, புகுஷிமா மற்றும் இவாதி ஆகிய கடலோர பகுதிகளில் உள்ள மக்களுக்கு ஏற்கெனவே நிலநடுக்கம் மற்றும் சுனாமி எச்சரிக்கையை விடுக்கப்பட்டிருந்ததுடன், மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறிச் செல்ல அறிவுறுத்தப்பட்டிருந்தனர்.
பாதிப்பு இல்லை
"சுனாமி மற்றும் நிலநடுக்கத்தால் அணு உலைகளுக்கு பாதிப்பு ஏற்படவில்லை. எனினும் ஊழியர்கள் அனைவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்' என்று டோகியோ எலெக்ட்ரிக் பவர் பிளான்ட் (டிஇபிசிஓ) அதிகாரி மசாஹிரோ கூறியுள்ளார்.
முழுமையான தகவல்
ஆனால் இந்த சுனாமி தாக்குதலைத் தொடர்ந்து ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து முழுமையான தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை.
2011 மார்ச் 11
முன்னதாக ஜப்பானின் வடக்கு கடற்கரை பகுதியில் கடந்த 2011ஆம் ஆண்டு மார்ச் 11ம் நாள் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, சுனாமி தாக்கியது.
18000 பேர் மரணம்
இதில் புகுஷிமாவில் இருந்த ஏராளமான அணு உலைகள் சேதமைடைந்தன. அதிலிருந்து அணுக்கதிர்கள் கசியத் தொடங்கின. இந்த சுனாமி மற்றும் கதிர் வீச்சில் 18,000 பேர் பலியாகினர் என்பது நினைவிருக்கலாம்.