ஆஸ்திரேலிய நகரங்களில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளை பிடிக்க தேடுதல் வேட்டை! 15 பேர் சிக்கினர்!
சிட்னி: ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளை பிடிக்க ஆஸ்திரேலியாவில் இன்று நாள் முழுவதும் நடத்தப்பட்ட போலீசாரின் தேடுதல் வேட்டையில் 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஈராக் மற்றும் சிரியாவில் நாசவேலைகளில் ஈடுபடும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்கு இந்தியா உள்பட பல நாடுகளிலும் அனுதாபிகள், ஆதரவாளர்கள் உள்ளனர் என்று கூறப்படுகிறது. மூளைச் சலவைக்கு உள்ளாகும் உலகின் பல பகுதிகளிலும் உள்ள இஸ்லாமிய அப்பாவி இளைஞர்கள், ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் இணைவதற்காக உயிரை பணயம் வைத்து ஈராக்கிற்கும், சிரியாவுக்கும் சென்று கொண்டுள்ளனர்.
இதேபோன்று, ஆஸ்திரேலியாவில் இருந்து 60 இஸ்லாமிய இளைஞர்கள், ஈராக் மற்றும் சிரியாவுக்கு தப்பி சென்று சண்டையில் ஈடுபட்டுள்ளதாகவும், அதில் 15 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் ஆஸ்திரேலிய உளவுத்துறை தகவல் அளித்துள்ளது. மேலும், 100க்கும் மேற்பட்டோர் மறைமுகமாக தீவிரவாத அமைப்புக்கு ஆதரவு அளித்துக் கொண்டுள்ளதாகவும் உளவுத்துறை கடந்த வாரம் எச்சரித்திருந்தது.
ஆஸ்திரேலியாவில் நடு வீதிகளில் மக்களை கழுத்தறுத்து கொல்ல ஐஎஸ்ஐஎஸ் திட்டமிட்டுள்ளதாகவும் அந்த நாட்டு உளவுத்துறை எச்சரித்துள்ளது. ஏனெனில் கடந்த பத்தாண்டுகளாகவே அமெரிக்காவின் தீவிரவாத எதிர்ப்பு போருக்கு ஆஸ்திரேலியா அளித்து வரும் ஒத்துழைப்பால், இந்த தாக்குதல்கள் நடத்தப்படலாம் என்று உளவுத்துறை எச்சரித்திருந்தது. இநத் தகவல் வெளியானது முதல் ஆஸ்திரேலிய மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
மேலும், போரிடுவதற்காக ஈராக் சென்றுள்ள இளைஞர்கள் ஆஸ்திரேலியா திரும்பினாலும் அது தங்களுக்கு ஆபத்தாக முடியும் என்று அந்த நாட்டு அரசு எண்ணுகிறது. இதையடுத்து சிட்னி மற்றும் பிரிஸ்பேன் நகரின் பல பகுதிகளில் சந்தேகத்திற்கிடமானவர்களிடம் ஆஸ்திரேலிய நாட்டு பாதுகாப்பு அதிகாரிகள் இன்று நாள் முழுவதும் விசாரணை நடத்தினர்.
பல வீடுகளில் அதிரடி சோதனைகள் நடத்தப்பட்டன. நவீன ஆயுதங்களுடன் 800 போலீசார் இந்த ஆபரேசனில் ஈடுபட்டனர். ஆஸ்திரேலிய வரலாற்றிலேயே மிகப்பெரிய தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கை இது என்று அந்த நாட்டு போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த ரெய்டின் முடிவில் தீவிரவாதிகளுக்கு உடந்தையாக இருந்த சந்தேகத்தின் பேரில் 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.