ஹீத்ரு விமான நிலையத்தில் 6 மணி நேரம் தடுத்து வைக்கப்பட்டார் பாபா ராம்தேவ்
லண்டன்: இங்கிலாந்தின் ஹீத்ரு விமான நிலையத்தில் யோகா குரு பாபா ராம்தேவ் 6 மணி நேரம் தடுத்து வைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விவேகானந்தரின் 120 வது ஆண்டு விழாக் கொண்டாட்டங்கள் ராம்தேவின் பதஞ்சலி யோகபீட அமைப்பினரால் இங்கிலாந்து நாட்டின் லண்டன் நகரில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இந் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள யோகா குரு பாபா ராம்தேவ் அழைக்கப்பட்டிருந்தார். இதனால் நேற்று அவர் லண்டன் சென்றார்.
ஆனால் ஹீத்ரு விமான நிலையத்தில் அந்நாட்டு சுங்கத்துறை அதிகாரிகள் அவரை 6 மணி நேரத்திற்கும் மேலாக தடுத்து வைத்தனர். வர்த்தக விசா அனுமதி பெறாமல் பார்வையாளர் விசா மட்டுமே ராம்தேவ் பெற்றிருந்தார் என்பதால் அவர் தடுத்து வைக்கப்பட்டார்.
மேலும் அவர் கையில் கொண்டு சென்றிருந்த மருந்துகள் குறித்தும் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். ராம்தேவை 6 மணி நேர விசாரணைக்குப் பின்னரே லண்டனுக்குள் செல்ல அதிகாரிகள் அனுமதித்தனர்.