எம்.ஹெச்.17: என் ஒரே மகளை கொன்றதற்கு நன்றி மிஸ்டர் புதின்- தந்தை கடிதம்
ஆம்ஸ்டர்டாம்: சுட்டுத் தள்ளப்பட்ட மலேசிய விமானத்தில் சென்ற தனது ஒரே மகள் கொல்லப்பட்டதை அடுத்து நெதர்லாந்தைச் சேர்ந்த ஒருவர் ரஷ்ய அதிபர் புதினுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் இருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு செல்லும் வழியில் உக்ரைனில் மலேசிய விமானம் ஏவுகணை வீசித் தாக்கப்பட்டது. இதில் விமானத்தில் இருந்த 298 பேர் பலியாகினர்.
விமானத்தில் பயணித்த நெதர்லாந்தைச் சேர்ந்த ஹானஸ் டி பார்ஸ்ட் என்பவரின் ஒரே மகளான 17 வயது எல்சிமீக்கும் பலியானார்.
துயரம்
தனது ஒரே மகள் கொல்லப்பட்டதால் ஹன்ஸ் டீ பார்ஸ்ட் கவலையில் ஆழ்ந்துள்ளார். மகள் இறந்ததை அவரால் ஜீரணிக்க முடியவில்லை.
தீவிரவாதிகள்
மலேசிய விமானத்தை ரஷ்ய ஆதரவுப்படை தீவிரவாதிகள் ஏவுகணை வீசித் தாக்கியதாக கூறப்படுகிறது. அமெரிக்காவும் அதைத் தான் கூறுகிறது.
புதின்
ஹன்ஸ் ரஷ்ய அதிபர் புதினுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, மிஸ்டர் புதின், என்னுடைய ஒரே மகள் எல்சிமீக்கை கொலை செய்ததற்காக ரஷ்ய ஆதரவுப்படை தலைவர்களுக்கு என்னுடைய நன்றிகள் என்று தெரிவித்துள்ளார்.
தேர்வு
எல்சிமீக் நன்றாக படிக்கக்கூடியவள். அவள் அடுத்த ஆண்டு தனது தோழிகள் ஜூலியா மற்றும் மரினாவுடன் சேர்ந்து இறுதி தேர்வை எழுதவிருந்தாள். அதன் பிறகு அவர் டியூ டெல்ப்டில் என்ஜினியரிங் படிக்க விரும்பினாள் என்று ஹன்ஸ் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
மரணம்
எல்சிமீக் திடீர் என்று உயிருடன் இல்லை. அவள் விமானத்தில் செல்கையில் போர் நடந்து கொண்டிருக்கும் நாட்டில் தாக்கப்பட்டு பலியாகியுள்ளாள். என் வாழ்க்கை சீரழிந்துவிட்டது. நன்றி என்று ஹன்ஸ் தெரிவித்துள்ளார். சமூக வலைதளத்தில் வெளியிடப்பட்ட இந்த கடிதம் தீயாக பரவியுள்ளது.
விடுமுறை
எல்சிமீக் தனது தாய், சகோதரர் மற்றும் தாயின் தற்போதைய கணவர் ஆகியோருடன் மலேசியாவில் விடுமுறையை கழிக்க சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.