'பிகினி கில்லர்' சோப்ராஜுக்கு மற்றொரு கொலை வழக்கில் ஆயுள் சிறை: நேபாள நீதிமன்றம் தீர்ப்பு
சர்வதேச அளவில் பல கொலைகள், கடத்தல் உள்ளிட்டவற்றில் ஈடுபட்டவர் இந்தியாவில் பிறந்தவரான சோப்ராஜ். பிரெஞ்சுக் குடியுரிமை பெற்றவர். 1975ம் ஆண்டு அமெரிக்காவைச் சேர்ந்த கோனி ஜோ பிரான்ஸிக் என்ற பெண்ணை கொன்ற வழக்கில் சோப்ராஜுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை நேபாள உச்சநீதிமன்றம் உறுதி செய்ததை தொடர்ந்து, தற்போது சோப்ராஜ் நேபாள சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார்.
இந்நிலையில் கனடா நாட்டை சேர்ந்த பெண்ணான புனோனிச் மற்றும் அவரது நண்பர் கேரியரே ஆகியோரை சரமாரியாக குத்தி கொலை செய்து அடையாளம் தெரியாமல் செய்து வீசிய வழக்கில் பக்தாபூர் மாநில கோர்ட் சார்லஸ் சோப்ராஜுக்கு ஆயுள் தண்டனை விதித்துள்ளது. 70 வயதான சோப்ராஜ் ஏற்கனவே ஆயுள் தண்டனை பெற்றவர் என்பதால் சாகும் வரை சிறையிலேயே இருக்க வேண்டிய நிலை.
பிகினி கில்லர் என்பதுதான் சார்லஸ் சோப்ராஜின் செல்லப் பெயர். 1970களில் இவரது அட்டகாசம் உலக நாடுகளைப் பெரும் பரபரப்பில் ஆழ்த்தியது. இளம் பெண்களை, குறிப்பாக நீச்சல் உடைப் பெண்களை மயக்கி கொலை செய்வது இவரது ஹாபியாக இருந்தது. சோப்ராஜின் தந்தை இந்தியர். தாயார் வியட்நாமைச் சேர்ந்தவர்.