மோடியை அமெரிக்காவில் வரவேற்க காத்திருக்கும் "கறுப்புக் கொடி" போராட்டங்கள்!
நியூயார்க்: அமெரிக்கா செல்லும் பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்புகள் ஒருபக்கம் இருக்க.. அவருக்கு எதிராக கறுப்புக் கொடி போராட்டங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.
ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் உரையாற்றுவதற்காக அமெரிக்கா செல்லும் நரேந்திர மோடி, 26-ந்தேதி மாலையில் நியூயார்க் போய் சேர்கிறார். பின்னர் மன்ஹட்டனில் உள்ள நியூயார்க் பேலஸ் ஓட்டலில் தங்கி ஓய்வெடுக்கும் அவர், மறுநாள் காலையில், அல்கொய்தாவால் தகர்க்கப்பட்ட உலக வர்த்தக மையம் அமைந்திருந்த பகுதியில் அமைக்கப்பட்டுள்ள அருங்காட்சியகத்தை பார்வையிடுகிறார்.
பல்வேறு யூத அமைப்புகளின் பிரதிநிதிகளை 28-ந்தேதி சந்திக்கும் மோடி, பின்னர் மடிசன் சதுக்கத்தில் ஆயிரக்கணக்கான இந்திய வம்சாவளியினர் மத்தியில் உரையாற்றுகிறார்.
அதே நேரத்தில் பிரதமர் மோடிக்கு எதிராக பல அமைப்புகள் போராட்டங்களையும் அறிவித்துள்ளன. "நீதி மற்றும் பொறுப்புகூறலுக்கான கூட்டமைப்பு" மோடிக்கு கறுப்புக் கொடி காட்டப் போவதாக அறிவித்துள்ளது.
மேலும் அதிபர் ஒபாமாவை மோடி சந்தித்து பேசும் போது, வெள்ளை மாளிகை எதிரே உள்ள பூங்காவில் "மக்கள் நீதிமன்றம்" அமைக்கப்பட்டு அதில் மோடிக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் நிகழ்வும் நடத்தப்பட இருக்கிறது.
குஜராத் முதல்வராக நரேந்திர மோடி இருந்த போது குஜராத் வன்முறைகளை சுட்டிக்காட்டி அவருக்கு அமெரிக்கா விசா வழங்காமல் இருப்பதற்கான அனைத்து பிரசாரங்கள், நடவடிக்கைகள் மேற்கொண்ட அமைப்புகள் தற்போது ஒருங்கிணைந்து கறுப்புக் கொடி போராட்டத்தில் குதித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.