நாடாளுமன்றப் பகுதியில் புகுந்த பன்றி... நவாஸ் ஷெரீப் பெயரை எழுதி அடித்துக் கொன்ற போராட்டக்காரர்கள்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாடாளுமன்றப் பகுதியில் நுழைந்த காட்டுப் பன்றியை அந்நாட்டு பிரதமர் நவாஸ் ஷெரீப் பெயரை எழுதி போராட்டக்காரர்கள் அடித்துக் கொலை செய்துள்ளனர்.
பாகிஸ்தான் பிரதமர் நவாஸ்செரீப் பதவி விலக கோரி முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கானின் தெக்ரிக்-இ-இன்சாப் கட்சியினரும், மதகுரு தெக்ருல் காத்ரியின் பாத் கட்சியினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இது தொடர்பாக கடந்த 40 நாட்களாக தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டக்காரர்கள் முகாமிட்டு உள்ளனர். ஆனால் பிரதமர் நவாஸ் செரீப் பதவி விலக மறுப்புத் தெரிவித்து வருகிறார்.
இந்நிலையில், நேற்று நாடாளுமன்ற வளாக பகுதிக்குள் காட்டு பன்றி ஒன்று தவறுதலாக புகுந்து விட்டதை தகிருல் காத்ரியின் ‘பாத்' கட்சி தொண்டர்கள் பார்த்தனர். நவாஸ் ஷெரீப் மீது கடுங் கோபத்தில் உள்ள போராட்டக்காரர்கள், காட்டுப் பன்றியைப் பிடித்து அதன் கால்களை கேபிள் வயரால் கட்டினர்.
அதனைத் தொடர்ந்து பன்றியின் மீது நவாஸ் ஷெரீப் பெயரை எழுதியப் போராட்டக்காரர்கள், அதனைத் தெருத் தெருவாக அழைத்துச் சென்றனர். பின்னர் தங்கள் ஆத்திரம் தீர அப்பன்றியை அவர்கள் அடித்தே சித்ரவதை செய்து கொன்றனர்.
பின்னர் பன்றியின் இறப்பைப் போராட்டக்காரகள் மகிழ்ச்சியுடன் கொண்டாடித் தீர்த்தனர்.