மலேசிய விமான பயணிகளின் சடலங்களுடன் உக்ரைனில் இருந்து கிளம்பிய 2 விமானங்கள்
கார்கிவ்: சுட்டுத் தள்ளப்பட்ட மலேசிய விமானத்தில் பயணம் செய்து பலியானவர்களின் உடல்களை ஏற்றிக் கொண்டு இரண்டு ராணுவ விமானங்கள் உக்ரைனில் இருந்து கிளம்பியது.
நெத்ரலாந்தில் இருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு கடந்த 16ம் தேதி கிளம்பிய மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் எம்.ஹெச். 17 உக்ரைனில் ரஷ்ய எல்லை அருகே ஏவுகணை வீசித் தாக்கப்பட்டது. இதில் விமானத்தில் இருந்த 298 பேர் பலியாகினர்.
விமானம் உக்ரைனில் உள்ள ரஷ்ய ஆதரவு புரட்சிப்படையினரின் பிடியில் உள்ள டோனட்ஸ்கில் விழுந்தது. இதையடுத்து உடல்களை எடுத்துச் சென்ற புரட்சிப்படையினர் அவற்றை நேற்று தான் ஒப்படைத்தனர். அவர்களிடம் இருந்து பெறப்பட்ட உடல்கள் ரயில் மூலம் உக்ரைன் அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கார்கிவுக்கு கொண்டு வரப்பட்டது.
இதையடுத்து உடல்கள் நெதர்லாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு சொந்தமான 2 ராணுவ விமானங்களில் ஏற்றி நெதர்லாந்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. விமானத்தில் பயணம் செய்தவ்ரகளில் பெரும்பாலானவர்கள் நெதர்லாந்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
60 சவப்பெட்டிகள் வரும் என்று எதிர்பார்க்கிறோம். ஆனால் இந்த எண்ணிக்கை உறுதியில்லை என்று நெதர்லாந்து அதிகாரி ஒருவர் தெரிவித்தார். பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நெத்ரலாந்து அரசு இன்றைய தினத்தை துக்க தினமாக அறிவித்துள்ளது.