நைஜீரியா: கல்லூரியில் மர்மநபர்கள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 20 மாணவர்கள் பலி
அபூஜா: நைஜீரியாவில் கல்லூரி ஒன்றில் நேற்று நடந்த வெடிகுண்டுத் தாக்குதலில் 20 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
தனிநாடு வேண்டி நைஜீரியாவில் போகோஹரம் தீவிரவாதிகள் போராடி வருகின்றனர். இதுவரை போகோஹரம் நடத்திய தாக்குதலில் ஆயிரத்திற்கும் அதிகமான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று நைஜீரியாவின் கனோ மாகாணத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் நுழைந்த மர்மநபர்கள், அங்கு குண்டு வெடிப்புத் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் அங்கிருந்த 20 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மர்மநபர்கள் மூன்று சக்கர வாகனத்தில் கல்லூரிக்குள் நுழைந்ததாகவும், குண்டு வெடிப்பைத் தொடர்ந்து கல்லூரி வளாகத்திற்குள் துப்பாக்கிச் சூடு நடந்த சத்தத்தைக் கேட்டதாகவும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என அச்செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.