இந்தியா - அமெரிக்கா... இந்த நூற்றாண்டின் தவிர்க்க இயலாத நட்பாளர்கள்: ஜான் கெர்ரி
வாஷிங்டன்: இந்தியா-அமெரிக்கா இடையேயான உறவு இன்றியமையாதது என்றும், இரு நாடுகளும் அந்த மாற்றத்துக்கான நேரத்தை நெருங்கியுள்ளது என்றும் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் பிரதமர் மோடி தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாக, அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி குறுகிய கால அரசுமுறைப் பயணமாக இன்று டெல்லி வருகை தர உள்ளார்.
எரிசக்தி மற்றும் பருவநிலை மாற்றம், கல்வி மற்றும் வளர்ச்சி, பொருளாதாரம், வணிகம், விவசாயம், அறிவியல், தொழில்நுட்பம், சுகாதாரம் உள்ளிட்டவற்றில் இந்திய, அமெரிக்க உறவுகளை வலுப்படுத்துவது குறித்து இருநாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர்கள் தலைமையில் நாளை பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.
இந்நிலையில், வாஷிங்டனில் திங்கள்கிழமை நடைபெற்ற அமெரிக்க சிந்தனையாளர்கள் கருத்தரங்கம் ஒன்றில் கலந்து கொண்ட ஜான் கெர்ரி, "இந்தியா மீதான வெளிநாட்டுக் கொள்கை' குறித்து பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
ஆதரவு...
பிரதமர் நரேந்திர மோடியின் "அனைவருடனும், அனைவரின் வளர்ச்சிக்காகவும்' என்ற திட்டத்தை சிறந்த தொலைநோக்குப் பார்வையாகக் கருதுகிறோம். அந்தத் திட்டத்துக்கு ஆதரவளிக்க விரும்புகிறோம்.
அமெரிக்கா ஆர்வம்...
அதற்கேற்ப, இந்தியாவின் பொருளாதாரத்துக்கு புத்துயிர் அளிப்பதற்கான கிரியா ஊக்கியாகச் செயல்பட அமெரிக்காவின் தனியார் துறை ஆர்வமாக உள்ளது.
மாற்றத்திற்கான நேரம்...
இந்தியாவுடனான எங்களது நட்புறவில் சாத்தியமுள்ள மாற்றங்களை ஏற்படுத்த வேண்டிய தருணம் வந்து விட்டது.
சீர்திருத்தம்...
இந்தியாவில் மாற்றத்தையும், சீர்திருத்தத்தையும் கொண்டு வருவதற்காகவே பெரும்பான்மையுடன் வெற்றி பெற்ற புதிய அரசு ஏற்பட்டுள்ளது.
தவிர்க்க முடியாத நண்பர்கள்...
அமெரிக்காவும், இந்தியாவும் இந்த நூற்றாண்டின் தவிர்க்க முடியாத நட்பாளர்கள். உலகின் மிகப் பெரிய பிரச்னைகளைத் தீர்க்க நமது நட்புறவு அவசியம் என இவ்வாறு ஜான் கெர்ரி.தெரிவித்துள்ளார்.