'டுபாக்கூர்' ரிப்போர்ட்டர்கள் அங்கீகாரத்தை ரத்து செய்த சீனா
பெய்ஜிங்: போலி பத்திரிகையாளர்களை கண்டுபிடிக்கும் நோக்கத்தில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையின் முடிவில் 14 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரின் பத்திரிகையாளர் அந்தஸ்தை சீன அரசாங்கம் ரத்து செய்துள்ளது.
நம்மூரில் சிலர் பிரஸ் என்று பைக்கிலும், கார்களிலும் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டு கல்யாண பத்திரிகை அடிக்கும் பிரிண்டிங் பிரஸ்சில் வேலை பார்த்துக்கொண்டிருப்பார்களே, அதேபோன்ற டுபாக்கூர்கள் சீனாவிலும் அதிகம். சிலர் பத்திரிகை நடத்துவதாக கூறிக்கொண்டு நாலைந்து பிளாக் அண்ட் ஒயிட் காகிதத்தில் யாரைப்பற்றி எதையாவது எழுதுவதும் உண்டு.
இவர்களை கட்டுப்படுத்த சீன அரசாங்கம் முடிவு செய்து களமிறங்கியது. பத்திரிகைகள் மற்றும் வார இதழ்களில், சீன அரசு அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு நடத்தினர். இதில் உரிய அனுமதியின்றி நடத்தப்பட்ட 76 பத்திரிகை நிறுவனங்களை மூட உத்தரவிடப்பட்டது. பத்திரிகையாளர் என்று கூறிக்கொண்டு சுற்றித்திரிந்த 258பேர் மீது கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அனுமதியின்றி அச்சடிக்கப்பட்ட 15 லட்சம் செய்தித்தாள்கள் மற்றும் வார இதழ்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
14, 455 பேருக்கு அளிக்கப்பட்டிருந்த பத்திரிகையாளருக்கான அடையாள அட்டைகள் ரத்து செய்யப்பட்டன.