சீனாவில் நிலக்கரியை எரித்தால் அமெரிக்கர்களுக்கு நடுக்கம்
வாஷிங்டன்: சீனாவில் மின்சார தேவைக்காக எரிக்கப்படும் நிலக்கரியால் உருவாகும் மாசு காரணமாக அமெரிக்காவில் பனிப்புயல் வீசி அங்குள்ள மக்கள் குளிரில் நடுங்கி வருவதாக ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.
பனை மரத்தில் தேள் கொட்டினால் தென்னை மரத்தில் நெரிகட்டும் என்ற கதையாக உள்ளது இந்த ஆய்வு. நாசா விண்வெளி ஆய்வு மையத்தின் சுற்றுச்சூழல் விஞ்ஞானி யுவான் வாங் செய்தி அமைப்பு ஒன்றுக்கு அளித்த பேட்டியில் இத்த ஆய்வு தொடர்பான தகவலை தெரிவித்துள்ளார்.
அவர் கூறியிருப்பதாவது:
தொழிற்சாலைகள் காரணம்
ஆசிய நாடுகள் தொழில் புரட்சியை துவங்கும் முன்பு வடமேற்கு பசிபிக் பிராந்தியத்தில் பனிப்புயலின் தாக்கம் குறைவாக இருந்தது. 30 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட தற்போது பனிப்புயலின் தாக்கம் 10 சதவிகிதம் வலு பெற்றுள்ளது.
காற்று மாசுபடுதல்
ஆசிய நாடுகளில் காற்று மாசுபடுதல் அதிகரிப்பது உள்நாட்டு பிரச்சனை மட்டுமல்ல, அது உலகின் எங்கோ ஒரு மூலையிலுள்ள பிற நாடுகளையும் பாதிக்கிறது.
சீனா
உலகிலேயே நிலக்கரியை அதிகம் எரிக்கும் நாடு சீனா. அந்நாட்டின் தலைநகர் பெய்ஜிங்கில் உலக சுகாதார நிறுவனம் அனுமதித்துள்ளதைவிட 400 மடங்கு அதிகமாக காற்றில் மாசு கலந்துள்ளது.
மாசு
சீனாவிலுள்ள அனல்மின் நிலையங்களில் இருந்து வெளியாகும் மாசு விண்ணில் கலந்து பனிபொழிவை வடமேற்கு பசிபிக் கடலை நோக்கி உந்தி தள்ளுகிறது. இதனால் வட அமெரிக்காவின் வானிலையில் மாற்றம் ஏற்படுகிறது என்று வாங் தெரிவித்துள்ளார்.