ஜப்பான் உளவாளியாக செயல்பட்டாரா சீனத் தூதர்... மவுனம் காக்கும் சீனா, ஜப்பான்!
பெய்ஜிங்: ஜப்பான் உளவாளியாக செயல்பட்டதால் ஐஸ்லாந்துக்கான சீன தூதர் அவரது மனைவியுடன் கைது செய்யப்பட்டார் என ஊடகங்களில் வெளியான தகவல் தொடர்பாக பதிலளிக்க சீனா மறுத்துள்ளது.
ஐஸ்லேந்து நாட்டிற்கான சீனத் தூதராக இருந்தவர் மா ஜிசெங்க். இவர் கடந்த 2004 - 2008ம் ஆண்டுகளில் டோக்கியோவில் உள்ள சீன தூதரகத்தில் பணி புரிந்த போது ஜப்பான் உளவாளியாக செயல்பட்டதாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக இந்தாண்டுத் தொடக்கத்தில் சீன அரசு மாவையும், அவரது மனைவியையும் கைது செய்து விசாரணை நடத்தி வருவதாக அமெரிக்காவில் இருந்து வெளிவரும் சீன நாளிதழ் ஒன்று கடந்த சில நாட்களுக்கு முன்னர் செய்தி வெளியிட்டிருந்தது. பின்னர் அச்செய்தி சீன நாட்டு இணைய ஊடகங்களிலும் முக்கியச் செய்தியாக வெளியானது. பின்னர் காரணம் தெரிவிக்கப்படாமல் அவற்றில் சில செய்திகள் அழிக்கப்பட்டு விட்டன.
இது தொடர்பாக சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ஹாங் லீயிடம் கேட்கப் பட்டதற்கு, ‘அப்படியா, இது தொடர்பாக தனக்கு எதுவும் தெரியாது' என மழுப்பலாகத் தெரிவித்துள்ளார்.
ஜப்பான் அரசிடம் இது தொடர்பாக ஊடகங்கள் கேள்வி எழுப்பியபோது, ‘ஊடகங்களில் வெளியான செய்திகளைப் பார்த்துத் தான் இந்த விவகாரத்தைத் தெரிந்து கொண்டோம். இது சீன விவகாரம். ஆதலால் இது தொடர்பாக நாங்கள் கருத்துத் தெரிவிக்க இயலாது' என பதிலளித்துள்ளது.
உண்மை நிலவரத்தை அறிய மா மற்றும் அவரது மனைவியை தொடர்பு கொள்ள முயன்ற போது பயனளிக்கவில்லை என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதற்கிடையே, ஐஸ்லாந்து சீன தூதரக அதிகாரி இது தொடர்பாக கூறுகையில், ‘கடந்த மே மாதம், சில தனிப்பட்ட காரணங்களால் சீனத் தூதர் மா மீண்டும் தனது பதவிக்கு திரும்ப மாட்டார்' என மட்டும் செய்தி வந்ததாகத் தெரிவித்துள்ளார்.