திருமணமானவரால் ஏமாற்றப்பட்ட சீனப்பெண்ணுக்கு 5000 டாலர்கள் நஷ்ட ஈடு!
ஷாங்காய்: சீனாவில் திருமணமான ஒருவர் பொய் சொல்லி மற்றொரு பெண்ணை ஏமாற்றிய வழக்கில் ஏமாற்றப்பட்ட பெண்ணிற்கு 5000 டாலர்கள் நஷ்ட ஈடாக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த நஷ்ட ஈட்டுத் தொகையானது இந்திய மதிப்பில் சுமார் 3 லட்ச ரூபாய் ஆகும்.
சீனாவில் தனக்கு இன்னும் திருமணமாகவில்லை என்று கூறி சென் என்ற பெண்ணுடன் நெருங்கிப் பழகிய லீ என்பவர் திடீரென்று அவருடனான தனது தொடர்பை முறித்துக்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து ஒரு நாள் அந்தப் பெண் அவரது வீட்டிற்கே சென்றபோது அங்கு அவரது மனைவி இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
வழக்கு பதிவு செய்த லீ:
பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து லீ தன்னுடன் நெருங்கிப் பழகினார் என்றும், தனது கற்புரிமையை அவர் மீறினார் என்றும் சென் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு பதிவு செய்தார்.
நஷ்ட ஈடு வழக்கு:
இதனால் தனக்கு ஏற்பட்ட மனஉளைச்சலுக்கும் சேர்த்து 81,000 டாலரும், மருத்துவ செலவுகளுக்காக 250 டாலரும் நஷ்ட ஈடாக அவர் வேண்டியிருந்தார்.
மிகவும் அதிகமான தொகை:
இந்த வழக்கின் தீர்ப்பு நேற்று வெளிவந்துள்ளது. புடாங் புதிய பகுதி மக்கள் நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த விசாரணையில் இவர் கேட்டிருந்த நஷ்ட ஈட்டுத் தொகை மிகவும் அதிகம் என்று குறிப்பிட்டிருந்தது நீதிமன்றம்.
பாலியல் தூய்மை தேவை:
மேலும், பாலியல் சுதந்திரம், பாலியல் பாதுகாப்பு மற்றும் பாலியல் தூய்மை தொடர்பான ஒரு தார்மீக உரிமை என்பதால் சட்டம் இதனைப் பாதுகாக்கும் வழிமுறைகளை மேற்கொள்ளவேண்டும் என்றும் தெரிவித்திருந்தது. மேலும், அப்பெண்ணுக்கு நஷ்ட ஈடாக 5000 டாலர்கள் வழங்கக் கோரி உத்தரவிடப்பட்டுள்ளது.