இந்திய, ஜப்பான் உறவு.. இது எங்களுக்கு எதிரான சதியாகத் தெரிகிறதே.. வயிறு எரியும் சீனா!
பெய்ஜிங்: இந்திய, ஜப்பான் உறவுகள் வலுவடைவதை தனக்கு எதிரான சதியாக சீனா பார்க்கிறது. இந்தியாவையும், சீனாவையும் பிரிக்க ஜப்பான் பிரதமர் ஷின்ஷோ அபே முயற்சிப்பதாகவும் சீன கம்யூனிஸ் கட்சி நடத்தும் நாளிதழ் ஒன்று புலம்பியுள்ளது.
பிரிக்ஸ் வளர்ச்சி மற்றும் சீன இந்திய ஒத்துழைப்பை, ஜப்பானின் முயற்சிகள் கேள்விக்குறியாக்கி வருவதாகவும் அந்த நாளிதழ் கவலை தெரிவித்துள்ளது.
மேலும் தனக்கும், இந்தியாவுக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டு விடக் கூடாது என்று ஜப்பான் கருதுவது போலத் தெரிவதாகவும் அந்த செய்தி கூறுகிறது.
குளோபல் டைம்ஸ் என்ற அந்த நாளிதழ் மேலும் புலம்பியுள்ளதாவது....!
பிரிக்ஸ் நோக்கம் என்ன
பிரேசில், ரஷ்யா, சீனா, இந்தியா, தென் ஆப்பிரிக்காவை ஆகிய நாடுகள் இணைந்து உருவாக்கியதுதான் பிரிக்ஸ் அமைப்பு. அதன் நோக்கம் தங்களுக்கென ஒரு சுயமான வளர்ச்சி வங்கியை உருவாக்குவது என்பதுதான். தற்போது இந்தியா, ஜப்பான் நெருக்கம், வர்த்தக உறவுகள், ஒத்துழைப்புகள், ஒப்பந்தங்கள் மூலம் இது கேள்விக்குறியாகியுள்ளது.
சீன - இந்திய ஒத்துழைப்பு பாதிக்கும்
அதேபோல இந்திய, ஜப்பான் நெருக்கத்தால், சீன, இந்திய ஒத்துழைப்பிலும் பாதிப்பு வரும். இரு நாடுகளும் புதிய வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தருணத்தை நோக்கி அடியெடுத்து வரும் நிலையில் இந்திய - ஜப்பான் உறவு அதற்கு வேட்டு வைப்பது போல அமையும்.
சீன - இந்திய பாதுகாப்பு உறவு பலவீனமடையும்
மேலும், இந்திய, ஜப்பான் நெருக்கத்தால், சீன - இந்திய பாதுகாப்பு உறவுகளும் பலவீனமடையும். அதுதொடர்பான முயற்சிகளும் பாதிக்கப்படலாம்.
அபேக்கு இதுதான் வேலை
சீன, இந்திய உறவை சீர்குலைக்கும் நோக்கத்தில்தான் ஜப்பான் பிரதமர் அபே இருப்பதாக தெரிகிறது.
எங்களை புறக்கணிக்கக் கூடாது
இந்தியாவும், ஜப்பானும் தங்களது பேச்சுக்களிலும், ஒப்பந்தங்களிலும், உடன்பாடுகளிலும், சீனாவையும், அமெரிக்காவையும் ஒதுக்கி வைக்க முயலக் கூடாது. சீனாவுடன் இணைந்து செயல்பட அவர்கள் முன்வர வேண்டும்.
இணைந்து செயல்பட்டால்தான் நல்லது
ஆசியாவின் இரு பெரும் சக்திகளான சீனாவும், இந்தியாவும் அனைத்து அம்சங்களிலும் இணைந்து செயல்படுவதே நல்லது. அதுதான் இரு நாடுகளின் வளர்ச்சிக்கும், பிராந்திய பாதுகாப்புக்கும், பொருளாதார வளர்ச்சிக்கும் முக்கியமானது, நல்லது.
பாதுகாப்பு ஒப்பந்தங்கள்.. கவலை தருகிறது
அபே, இந்த ஆண்டு தொடக்கத்தில் இந்தியா சென்றிருந்தபோது இரு நாடுகளுக்கு இடையே தேசிய பாதுகாப்பு கமிட்டிகளை அமைக்க பரிந்துரைத்தார். தற்போது இந்தியப் பிரதமரின் பயணத்தின்போது இரு நாடுகளும் நேரடியான தூதரக உறவுகளை வலுப்படுத்தவும், வான் மற்றும் கடல் பாதுகாப்புக்கான ஒத்துழைப்பை அதிகரிக்கவும் அவர் விருப்பம் தெரிவித்துள்ளார். மேலும் தனது இந்தியப் பயணத்தின்போது இந்தியாவுக்கான ஜப்பான் உLவியை 2.02 பில்லியன் டாலராகவும் அவர் உயர்த்தினார். மேலும் ஜப்பான் அணு மின் நிறுவனங்களுக்கு இந்தியாவிடமிருந்து 4.5 பில்லியன் டாலர் ஆர்டர்களையும் அவர் பெற்றுக் கொடுத்துள்ளார்.
இது சீனாவுக்கு ஆபத்தாகும்
மேலும் இந்தியாவின் பரந்து விரிந்த சந்தை மற்றும் அடிப்படைக் கட்டமைப்புத் திட்டங்களில் ஜப்பானின் ஈடுபாட்டை அதிகரிக்கும் முயற்சியிலும் அபே ஈடுபட்டுள்ளார். மோடியும் கூட ஜப்பானின் உதவிகளையும், ஒத்துழைப்புகளையும், தொழில்நுட்பங்களையும் பெற அதிக ஆர்வம் காட்டுகிறார். இது சீனாவுக்கு பாதகத்தை ஏற்படுத்தும்.
நல்லதுக்கு இல்லை
மொத்தத்தில் ஜப்பான் - இந்தியாவின் வலுவடையும் நெருக்கம், தற்போதைய சர்வதேச அரசியல் பார்வையில் சீனாவுக்கு பாதகத்தை ஏற்படுத்தும் என்று கூறப்பட்டுள்ளது.
சீனா - ஜப்பான் .. எப்பவுமே பகையாளிகள்!
சீனாவும், ஜப்பானும் மிகப் பெரிய பகையாளிகள் என்பது நினைவிருக்கலாம். இரு நாடுகளுக்கும் எப்போதுமே ஏழாம் பொருத்தம்தான். இந்த நிலையில் இந்தியா, ஜப்பானுடன் நெருங்கிச் செல்வது சீனாவை எரிச்சல்படுத்தியுள்ளது.