விசுவாசமாக இருக்க வேண்டும்.. சீன ராணுவத்துக்கு அதிபர் ஸி ஜின்பிங் திடீர் வேண்டுகோள்!
பெய்ஜிங்: சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கும், அரசுக்கும் விசுவாசமாக இருக்க ராணுவம் முயற்சிக்க வேண்டும். முழுமையான விசுவாசத்தை அது காட்ட வேண்டும். ஆட்சியை சுமூகமாக நடத்த உதவ வேண்டும். அரசின் அனைத்து முடிவுகளையும் முழுமையாக செயல்படுத்துவதை அது உறுதி செய்ய வேண்டும் என்று சீன அதிபர் ஸி ஜின்பிங் கோரிக்கை விடுத்துள்ளார்.
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராகவும், சீன அரசின் மத்திய ராணுவ கமிஷனின் தலைவருமாக இருக்கும் ஜின்பிங், தனது இந்தியப் பயணத்தை முடித்து விட்டு வந்த கையோடு இவ்வாறு பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுதொடர்பாக சீன அரசின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான ஸின்குவா செய்தி வெளியிட்டுள்ளது. அதிபரின் பேச்சிலிருந்து...
நம்பிக்கை வையுங்கள்
மக்கள் விடுதலை ராணுவத்தின் (சீன ராணுவம்) தலைமை, சீன அரசு மற்றும் சீன கம்யூனிஸ்ட் கட்சி மீது மிகுந்த நம்பிக்கை வைக்க வேண்டும். விசுவாசமாக இருக்க வேண்டும்.
உத்தரவுகளை முழுமையாக அமல்படுத்த வேண்டும்
அரசு மற்றும் கட்சியின் உத்தரவுகளை முழுமையாக அமல்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும். மத்திய தலைமையின் முடிவுகளை உறுதியுடன் செயல்படுத்த வேண்டும்.
ஆயத்த நிலையில் இருக்க வேண்டும்
ராணுவம் தனது படையினரை முழு ஆயத்த நிலையில் வைத்திருக்க வேண்டும். தற்போதைய தகவல் தொழில்நுட்ப உலகில், பிராந்தியப் போரில் வெல்லும் திறனுடன் ராணுவம் திகழ வேண்டும்.
அதிபரின் உத்தரவுகளை மதிக்க வேண்டும்
அதிபரின் உத்தரவுகளையும், முடிவுகளையும் முழுமையாக மதித்து பின்பற்றி நடக்க வேண்டும். இதுதொடர்பான அறிக்கைகளையும் அவ்வப்போது அதிபருக்கு அனுப்ப வேண்டும் என்று அதில் ஸி கூறியுள்ளதாக ஸின்குவா செய்தி கூறுகிறது.
ஏன் இந்த திடீர் அறிக்கை
அதிபர் ஸி ஜிங்பிங் ஏன் இப்படி திடீரென ராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளார் என்பது தெரியவில்லை.
இந்தியாவை சீண்டும் சீன ராணுவம்
ஆனால் சமீப காலமாக இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைவதும், இந்தியப் படையினரை சீண்டுவதுமாக உள்ளது சீன ராணுவம்.
விலகச் சொல்லியும் விலகாத ராணுவம்
மேலும் லடாக் பகுதியில் எல்லைக் கோட்டுப் பகுதியைத் தாண்டி வந்த சீன ராணுவத்தினரை அங்கிருந்து விலகுமாறு அதிபர் ஜின்பிங் உத்தரவிட்டிருந்தார். ராணுவமும் விலகியது. ஆனால் சுமர் பகுதியில் சீன ராணுவம் அத்துமீறி நுழைந்தது. இதனால் இந்தியா கடும் அதிருப்தி அடைந்தது. சீன - இந்திய செய்தியாளர்கள் கூட்டத்தை இதன் காரணமாக இந்தியா ரத்து செய்தது என்பது நினைவிருக்கலாம்.
ராணுவம் மீது ஜின்பிங் அதிருப்தி?
சீன ராணுவத்தின் இந்த அத்துமீறிய செயலால் ஜின்பிங்கே அதிருப்தி அடைந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
ராணுவத்தின் மீது ஜின்பிங் கோபம்
சீனாவின் அதி உயர் அதிகாரம் படைத்த தலைவராக தற்போது ஜின்பிங் இருக்கிறார். தனக்கு சாதகமான, விசுவாசமான ராணுவ அதிகாரிகளைத்தான் அவர் முக்கியப் பொறுப்புகளில் வைத்துள்ளார். இந்த நிலையில்தான் தான் சொல்வதை ராணுவம் கேட்க வேண்டும் என்ற தொணியில் தற்போது அவர் பேசியுள்ளதாக கூறப்படுகிறது.
ராணுவ தளபதி விளக்கம்
இந்த நிலையில் ராணுவ தளபதி பாங்க் பெங்குயி விடுத்துள்ள ஒரு அறிக்கையில், அதிபரின் உத்தரவுகளையும், ஆணைகளையும்தான் ராணுவம் தொடர்ந்து பின்பற்றி வருவதாக விளக்கம் கொடுத்துள்ளார்.