2 விமானங்களில் நெதர்லாந்து வந்த மலேசிய விமான பயணிகளின் உடல்கள்: கதறி அழுத உறவினர்கள்
ஆம்ஸ்டர்டாம்: மலேசிய விமானத்தில் சென்று பலியான நெதர்லாந்தைச் சேர்ந்தவர்களின் உடல்கள் விமானம் மூலம் அவர்களின் நாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.
கடந்த 16ம் தேதி நெதர்லாந்தில் இருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு சென்ற மலேசிய விமானம் உக்ரைனில் ரஷ்ய எல்லை அருகே ஏவுகணை வீசித் தாக்கப்பட்டது. இதில் விமானத்தில் இருந்த 298 பேர் பலியாகினர்.
பலியானவர்களில் பெரும்பாலானோர் நெதர்லாந்தைச் சேர்ந்தவர்கள்.
விமானங்கள்
பலியானவர்களின் உடல்கள் சிறப்பு பெட்டிகளில் வைக்கப்பட்டு 2 ராணுவ விமானங்கள் மூலம் நெதர்லாந்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பலியானவர்களில் 193 பேர் நெதர்லாந்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
உறவினர்கள்
உடல்களை கொண்டு வந்த 2 விமானங்களும் நெதர்லாந்தில் உள்ள எய்ன்தோவன் விமான தளத்தை புதன்கிழமை அடைந்தன. விமான தளத்தில் பலியானவர்களின் உறவினர்கள் 1,000 பேர் உடல்களை எதிர்பார்த்து நின்றனர். அவர்கள் சவப்பெட்டிகளை பார்த்ததும் கதறி அழுதனர்.
மன்னர்
விமான விபத்தில் பலியானவர்களுக்காக நெதர்லாந்து மன்னர் வில்லெம் அலெக்சாண்டர், ராணி மேக்சிமா ஆகியோரும் நாட்டு மக்களுடன் சேர்ந்து துக்கம் அணுசரித்தனர்.
40 உடல்கள்
பலியானவர்களில் 40 பேரின் உடல்கள் தான் புதன்கிழமை நெதர்லாந்துக்கு வந்தது. விமானம் சுட்டுத் தள்ளப்பட்டு கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்கு பிறகு தான் உடல்கள் நெதர்லாந்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.