மாயமான விமான கறுப்புப் பெட்டி கிடைக்கவில்லை... தேடும்பணியை முடிக்க மீட்புக்குழு முடிவு
பெர்த்: மாயமான மலேசிய விமானத்தின் கறுப்பு பெட்டியை தேடும் பணியை ஓரிருநாளில் முடிக்க மீட்புக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த மாதம் 8ம் தேதி 5 இந்தியர்கள் உட்பட 239 பயணிகளுடன் மலேசிய விமானம் ஒன்று நடுவானில் மாயமானது. இந்த விமானம் இந்திய பெருங்கடலின் தெற்குப்பகுதியில் விழுந்து நொறுங்கியதாக கருதப்படுவதால், ஆஸ்திரேலியா, சீனா உள்ளிட்ட நாடுகளின் கப்பல்கள் அந்த பகுதியில் சல்லடை போட்டு தேடி வருகின்றன.
மாயமான விமானம் எப்படி விபத்தில் சிக்கியது என்பதைக் கண்டறியும் பொருட்டு அதன் கறுப்புப் பெட்டி தேடப்பட்டு வருகிறது.அதனை தேடும் பணியில் ஆஸ்திரேலிய, இங்கிலாந்து கப்பல்கள் ஈடுபட்டுள்ளன.
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இந்தியப் பெருங்கடலில் மாயமான விமானத்தின் ‘பிங்' எனும் சமிக்ஞைகள் கிடைத்தன. அதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட இடத்தில் தேடுதல் வேட்டை முடுக்கி விடப்பட்டது. கறுப்பு பெட்டியை விரைவாக மீட்கும் நோக்கில் அமெரிக்காவின் புளூபின்-21 என்ற நீர்மூழ்கி ரோபோ ஈடுபடுத்தப்பட்டது.
ஆனால், இந்த ரோபோ 7 முறை நீருக்குள் சென்று தகவல்களை சேகரித்து வந்த பிறகும் விமானம் குறித்தோ, அதன் கறுப்பு பெட்டியை குறித்தோ எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இதனால் தற்போது மீட்புக்குழுவினர் விரக்தியடைந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. எனவே கறுப்பு பெட்டியை தேடும் பணியை 5 அல்லது 6 நாட்களுக்குள் முடிக்க அவர்கள் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
முன்னதாக இந்த பணியை பல்வேறு மாதங்களுக்கு நீட்டிக்க அவர்கள் திட்டமிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.