பிரேசிலில் வெள்ளப்பெருக்கில் சிக்கி 43 பேர் பலி
ரியோ டி ஜெனிரோ: பிரேசிலில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி 43 பேர் பலியாகினர்.
தென்அமெரிக்க நாடான பிரேசிலில் பலத்த மழை பெய்து வருகிறது. அணைகள் மற்றும் ஏரிகள் நிரம்பி வழிவதால் ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. வீதிகளில் ஓடும் வெள்ளம் வீடுகளுக்குள் புகுந்தது.
அங்குள்ள விலா வெல்ஹா நகரம் மற்றும் அதை சுற்றியுள்ள பல பகுதிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் சூழ்ந்துள்ளது.
எனவே 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வீடுகளை இழந்து தவிக்கின்றனர். மேலும் பல பகுதிகளில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. இதனால் பல வீடுகள் மண்ணுக்குள் புதையுண்டு கிடக்கின்றன. மீட்பு பணியில் ராணுவ வீரர்களும், மீட்பு குழுவினரும் ஈடுபட்டுள்ளனர்.
அதிபர் டில்மா ருசேப் வெள்ளம் பாதித்த மினாஸ் கெரியாஸ் பகுதிக்கு நேரில் சென்று பார்வையிட்டார். அப்பகுதிக்கு அவசர கால நிதி வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
வெள்ளம் மற்றும் வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை 43 பேர் பலியாகி உள்ளனர். வெள்ளம் பாதித்த பகுதிகளில் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது.