எபோலா வைரஸ் தாக்கி ஒரு அமெரிக்கர் பலி, 2 டாக்டர்கள் மருத்துவமனையில்
மான்ரோவியா: மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் பரவி வரும் எபோலா வைரஸ் தாக்கி ஒரு அமெரிக்கர் பலியாகியுள்ளார். மேலும் 2 அமெரிக்க டாக்டர்கள் வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் எபோலா என்ற வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் தாக்கி இதுவரை 670க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இந்நிலையில் மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள லைபீரியாவில் செயல்பட்டு வரும் வடக்கு கரோலினாவைச் சேர்ந்த நிறுவனத்தில் பணியாற்றி வரும் அமெரிக்காவைச் சேர்ந்த டாக்டர் கென்ட் பிரான்ட்லி(33) எபோலா வைரஸால் தாக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
திருமணமாகி 2 குழந்தைகளுக்கு அப்பாவான கென்ட் சிகிச்சை பெற்றுக் கொண்டே பிறருக்கு மருத்துவ அறிவுரைகள் வழங்கி வருகிறார். மேலும் லைபீரியாவில் பணியாற்றி வரும் அமெரிக்க டாக்டரான நான்சி ரைட்போலும் எபோலா வைரஸால் தாக்கப்பட்டுள்ளார்.
இதற்கிடையே நாட்டில் உள்ள மிகப்பெரிய மருத்துவர்களில் ஒருவர் எபோலா வைரஸ் தாக்கி பலியானதாக லைபீரிய அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் லைபீரியாவில் அந்நாட்டு நிதி அமைச்சகத்தில் பணியாற்றி வந்த அமெரிக்காவின் மின்னசோட்டா மாநிலத்தைச் சேர்ந்த பாட்ரிக் சாயர் எபோலா வைரஸ் தாக்கி பலியானார். இந்த வைரஸ் தாக்கி பலியான முதல் அமெரிக்கர் சாயர் என்பது குறிப்பிடத்தக்கது.