மலேசிய விமான விவகாரத்தில் ஈரானுக்குத் தொடர்பு.. சந்தேகம் கிளப்பும் இஸ்ரேல்
டெல் அவிவ்: மாயமாகி விட்ட மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் குறித்து அடுத்தடுத்து பல்வேறு சந்தேகங்கள், கருத்துக்கள், குழப்பங்கள்தான் வந்தவண்ணம் உள்ளன. அந்த வரிசையில், இஸ்ரேலைச் சேர்ந்த விமான நிறுவனத்தின் முன்னாள் பாதுகாப்புப் பிரிவுத் தலைவர், இந்த விவகாரத்தில் ஈரானுக்குத் தொடர்பு இருக்கலாம் என்று புதுத் தகவலை வெளியிட்டுள்ளார்.
மேலும் விமானம் கடலில் விழுந்தோ அல்லது வேறு விபத்திலோ சிக்கியிருக்க வாய்ப்பில்லை என்றும் பத்திரமாகவே இருக்க வாய்ப்பு அதிகம் என்றும் இவர் கூறுகிறார்.
எல் அல் என்ற இஸ்ரேல் விமான நிறுவனத்தின் முன்னாள் பாதுகாப்புப் பிரிவுத் தலைவரான ஐசக் எபட் தான் இப்படிக் கூறியுள்ளார். ஈரான் மீது இவர் சந்தேகப் பார்வையையும் திருப்பி விட்டுள்ளார்.
இஸ்ரேல் விமான பாதுகாப்பு அதிகாரி
முன்பு இவர் எல் அல் நிறுவனத்தின் தலைமை பாதுகாப்பு அதிகாரியாக இருந்தவர். தற்போது அமெரிக்காவின் நியூஜெர்சியில் விமானப் பாதுகாப்பு ஆலோசகராக பணியாற்றி வருகிறார்.
ஈரானியர்கள்தான் கடத்தியுள்ளனர்
இவர் மலேசிய விமான விவகாரம் குறித்துக் கூறுகையில், இரண்டு ஈரானியர்கள் போலி பாஸ்போர்ட் மூலம் விமானத்தில் பயணித்தது குறித்து ஆரம்பத்தில் விசாரணை அதிகாரிகள் சந்தேகப்பட்டது சரியானதே. அவர்கள் மீது முழுக் கவனத்தையும் தற்போது திருப்ப வேண்டும்.
தேவையில்லாமல் திசை திருப்பி விட்டனர்
ஆனால் அதை விட்டு விட்டு தேவையில்லாத விஷயங்களில் கவனத்தை திசை திருப்பி விட்டு விட்டனர். விமானத்துக்கு என்ன நடந்தது என்பது யாருக்கும் தெரியவில்லை. எனது ஊகம் என்னவென்றால், நிச்சயம் ஈரானுக்கு இதில் நேரடித் தொடர்பு உள்ளது என்பதே.
கடத்தலைத் தவிர வேறு இல்லை
அவர்கள்தான் விமானத்தைக் கடத்தியுள்ளனர். யாருமே வர முடியாத இடத்தில் கொண்டு போய் இறக்கி விட்டுள்ளனர். இதுதான் நடந்திருக்க முடியும்.
கடலில் போய்த் தேடுவதா...
விமானம் மாயமான பின்னர் கிட்டத்தட்ட 7 மணி நேரத்திற்கு தொடர்ந்து பறந்துள்ளது. ஆனால் ஈரானியர்கள் இருவர் போலி பாஸ்போர்ட்டுடன் பயணித்தது குறித்து தீவிர விசாரணை நடத்தப்படவில்லை. மாறாக கடலில் போய்த் தேடிக் கொண்டிருக்கிறார்கள். இது தவறானது.
இஸ்ரேலில் இப்படி நடக்க வாய்ப்பே இல்லை
இதுவே இஸ்ரேலாக இருந்திருந்தால் இன்னேரத்திற்கு விமானத்தைக் கண்டுபிடித்திருப்பார்கள். இப்படிப்பட்ட தேடுதலை, தாமதத்தை ஏற்படுத்தியிருக்க மாட்டார்கள். இப்படி ஒரு சம்பவமே நடந்திருக்க முடியாது.
ஒருவரையும் விட மாட்டோம்
1968ம் ஆண்டு தான் முதல் முறையாகவும், அதேசமயம், கடைசி முறையாகவும் ஒரு எல் அல் விமானம் கடத்தப்பட்டது. அதன் பிறகு ஒரு முறை கூட இஸ்ரேல் விமானம் எதுவும் கடத்தப்பட்டதே இல்லை. ஒவ்வொரு பயணியையும் முழுமையாக சோதிக்காமல், பரிசோதிக்காமல் விமானத்தில் ஏற விடவே மாட்டோம் நாங்கள். யாரும் விசாரணையிலிருந்து தப்பவே முடியாது.
உறுதியாக நம்புகிறேன்
சம்பந்தப்பட்ட இரண்டு ஈரானியர்களும் விமானத்தைக் கடத்தியிருப்பார்களா என்று என்னால் சந்தேகப்படவெல்லாம் முடியாது. மாறாக, அவர்கள்தான் இதைச் செய்திருப்பார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
கேப்டன் நல்லவர்
இந்த விஷயத்தில் விமானிகளை என்னால் சந்தேகப்பட முடியவில்லை. கேப்டனுக்கு 53 வயதாகிறது. மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துடன் 30 வருடமாக அவர் பணியாற்றி வருகிறார். திடீரென அவர் எப்படி தீவிரவாதியாக மாற முடியும். அல்லது அவர் தற்கொலை செய்ய விரும்பினாரா.. அப்படியானால் தற்கொலை செய்திருந்தால் இன்னேரத்திற்கு விமானத்தின் சிதைந்தபாகங்களக் கண்டுபிடித்திருக்கலாமே.. அது கிடைக்கவில்லையே..
சந்தேகமே இல்லை
அதேபோல கேப்டன் ஜக்காரி அகமத் ஷா குறித்து பல சந்தேகங்கள் கிளப்பப்படுகிறது. ஆனால் அவர் நல்ல வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர். திருமணமாகி சந்தோஷத்துடன் இருந்து வருபவர். அவரது புரபலைப் பார்த்தால் சுத்தமாக சந்தேகமே வரவில்லை.
சந்தேகமே வேண்டாம்
எல்லாரும் தேடியும் விமானம் கிடைக்கவில்லை என்றால் என்ன அர்த்தம். அது கடத்தப்பட்டுள்ளது. அதில் சந்தேகமே வேண்டாம். திட்டமிட்டு இதைச் செய்துள்ளனர் தீவிரவாதிகள் என்றார் அவர்.