புற்றுநோய், மன அழுத்தம் நீங்க வேண்டுமா? உடலில் தீ வைத்தால் போதும்- இது சீன வைத்தியம்
பீஜிங்: சீனாவில் பல நூறு ஆண்டுகளாக வழக்கத்தில் இருந்து வந்த தீயால் மேற்கொள்ளப்படும் சிகிச்சை மீண்டும் அங்கு பிரபலமடைந்து வருகின்றது. இந்த பழமையான சிகிச்சை முறையால் மன அழுத்தம், அஜீரணம், மலட்டுத் தன்மை, புற்றுநோய் போன்ற எல்லாவகையான நோய்களையும் குணப்படுத்தலாம் என்று இந்த சிகிச்சையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
3000 ரூபாய் கட்டணம்:
நெருப்பு சிகிச்சைக்கு ஒரு மணி நேரத்திற்கு 300 யுவான் அதாவது இந்திய மதிப்பில் சுமார் 3000 ரூபாய் ஆகும்.
இளைஞர்களுக்கும் பாடம்:
நெருப்பு சிகிச்சை வல்லுனரான சாங் பென்ஹாவோ இளைஞர்களுக்கும் இம்முறையை கற்றுக் கொடுத்து வருகின்றார். இச்சிகிச்சையின் படி எங்கு சிகிச்சை வேண்டுமோ அங்கு மூலிகைச்சாறு ஒன்றினை தடவி துணியால் மூடி விடுகின்றனர்.
தீயால் சிகிச்சை:
பின்பு, அதன்மேல் தண்ணீர் மற்றும் 95 சதவீத ஆல்கஹாலையும் கலந்து தடவி தீயைப் பற்ற வைக்கின்றனர். ஆனால், நோயாளி அமைதியாக படுத்திருப்பதுதான் வியப்பு.
அறுவை சிகிச்சை தேவையில்லை:
இந்த தீ சிகிச்சையால் வலியோ, தீக்காயமோ ஏற்படாதாம். வெப்பத்தை மட்டுமே உணர்வார்களாம். மேலும், இதனால் அறுவை சிகிச்சைகளைத் தவிர்க்க முடியும் என்றும் கூறப்படுகின்றது.
சீனாவின் நம்பிக்கை:
உடலில் உள்ள வெப்ப, குளிர் நிலைகளை சமமாகப் பராமரிப்பதன் மூலம் சுகாதாரமாக வாழ முடியும் என்ற சீன நாட்டுப்புற நம்பிக்கைகள் அடிப்படையில் இந்த சிகிச்சைமுறை செயல்படுத்தப்படுவதாக கூறப்படுகின்றது.
ஈர்க்கும் எளிமையான சிகிச்சைகள்:
சீனாவில் கட்டுப்படுத்தப்பட்ட மருத்துவக் காப்பீடும், விலையுயர்ந்த மருத்துவ சிகிச்சைகளும் ஏழை, எளிய மக்களை இதுபோன்ற சிகிச்சைகள் பக்கம் ஈர்க்கின்றது என்பது இத்தகைய சிகிச்சைகள் பிரபலமாவதற்கு ஒரு காரணமாகக் கருதப்படுகின்றது.
இதிலும் காப்பியா..?
சீனாக்காரர்கள் தீயின் மகிமையை இப்போதுதான் தெரிந்துள்ளார்கள். ஆனால் தமிழர்கள் பல ஆண்டுகாலமாக கோவில்களில் தீமிதி திருவிழா நடத்துகிறார்கள். ஆன்மீகத்துடன், அறிவியலும் கலந்தது இந்த வழிபாடாகும். அக்குபஞ்சர் நிபுணர்கள், தீ மிதிப்பது, மன அழுத்தம் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வாக அமையும் என்று கூறிவருவது கருத்தில் கொள்ளத்தக்கது.