லண்டன் சென்ற விமானத்தில் கோளாறு: மரண வாசலை தொட்டுவிட்டு திரும்பிய பயணிகள்
லண்டன்: 'டொபாகோ தீவுகளுக்கு சுற்றுலா சென்ற பயணிகள் இங்கிலாந்து திரும்பும்போது விமானத்தில் கோளாறு ஏற்பட்டு அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர்.
ட்ரினிடாட் மற்றும் டொபாகோ குடியரசில் உள்ள டொபாகோவில் இருந்து மொனார்க் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று இங்கிலாந்துக்கு கிளம்பியது. விமானம் ஏப்ரல் 2ம் தேதி லண்டனில் உள்ள கேட்விக் விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டும். ஆனால் விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு விமானம் திசை மாற்றப்பட்டு பல்வேறு விமான நிலையங்களுக்கு சென்று ஒரு வழியாக ஏப்ரல் 6ம் தேதி அதிகாலை கேட்விக்கை சென்றடைந்தது.
விமானத்தில் டொபாகோ தீவுக்கு சுற்றுலா சென்றவர்களே இருந்தனர். விமானம் பறந்து கொண்டிருக்கையில் திடீர் என்று விமானி விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. விமானம் கடலில் விழ வாய்ப்பு உள்ளது என்றார். இதை கேட்ட பயணிகள் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தனர்.
இந்நிலையில் விமானி மீண்டும் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதாவது விமானி அறையில் புகை வருவதாக தெரிவித்து பயணிகள் மேலும் அச்சம்கொள்ள வைத்தார்.
இதையடுத்து விமானம் பார்படாஸில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. கோளாறுகளையும் மீறி விமானி திறமையாக விமானத்தை தரையிறக்கினார். பின்னர் பயணிகள் ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டு மாற்று விமானம் மூலம் லண்டனுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.