2-ம் உலகப் போருக்குப் பின் முதல் முறையாக இந்தியாவுக்கு ராணுவ தளவாடங்களை வழங்குகிறது ஜப்பான்!
டோக்கியோ: 2-ம் உலகப் போருக்குப் பின்னர் முதல் முறையாக இந்தியாவுக்கு ராணுவ தளவாடங்களை வழங்க ஜப்பான் முன்வந்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி 5 நாள் பயணமாக ஜப்பான் சென்றுள்ளார். அங்கு ஜப்பான் பிரதமர் ஷின்சோ ஆபேயை நேற்று சந்தித்துப் பேசுகையில் இருநாடுகளும் இடையேயான ராணுவ ஒத்துழைப்பை வலுப்படுத்தப்படுவதற்கான முடிவு எட்டப்பட்டது.
2வது உலக யுத்தத்தில் ஜப்பான் தோல்வியைத் தழுவிய நிலையில் வெளிநாடுகளுக்கு ராணுவ தளவாட விற்பனைக்கு அந்நாடு தடை விதித்தது. தற்போது இந்தியாவுக்கு கடற்படைக்கான தளவாடங்களை வழங்குவதற்கு ஜப்பான் முன்வந்துள்ளது.
ஜப்பான் பிரதமர் ஆபே- பிரதமர் மோடி இடையேயான பேச்சுவார்த்தைக்குப் பின்னர் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையிலும், "இருநாட்டு பிரதமர்களும் ராணுவ உறவுகளின் முக்கியத்துவம் குறித்து மீண்டும் பேசி முடிவுக்கு வந்தனர். அதில் இரு நாடுகளுக்குமிடையேயான ராணுவ உறவுகளை வலுப்படுத்தும் முடிவு எட்டப்பட்டது" என்று கூறப்பட்டுள்ளது.
பாதுகாப்புத் துறையில் இருநாடுகளும் கூட்டுறவு மற்றும் பரிமாற்றங்களுக்கான தீர்மானத்தில் கையெழுத்திட்டன.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மோடி , இருநாடுகளின் நலன் குறித்த அக்கறையைக் கருத்தில் கொண்டு, இரு நாட்டு ராணுவ ஒத்துழைப்புக்கு புதிய கோணத்தையும், புதிய உந்துசக்தியையும் வழங்க நாங்கள் முயற்சி செய்து வருகிறோம்.
ராணுவத் தொழில்நுட்பம், மற்றும் தளவாடம் ஆகிய பிரிவுகளில் கூட்டுறவு வலுப்படுத்தப்படும். உயர் தொழில்நுட்பம், விஞ்ஞானத் தொழில்நுட்பம் ஆகியவற்றிலும் இருநாடுகளிடையே ஒத்துழைப்பை மேலும் விரிவு படுத்த தீர்மானித்துள்ளோம்.
மேலும் இரு நாட்டு மக்களுக்கிடையேயான உறவுகள், கல்வித்துறை சார்ந்த பரிவர்த்தனைகள் ஆகியவற்றிலும் கூட்டுறவை வலுப்படுத்த முடிவு எட்டப்பட்டுள்ளது என்றார்.