ஈராக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கம் மீது யு.எஸ். உடன் இணைந்து பிரான்ஸும் தாக்குதல்!
பாக்தாத்: ஈராக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தின் நிலைகள் மீது வான் தாக்குதல் நடத்தி வரும் அமெரிக்காவுடன் பிரான் விமானப் படையும் இணைந்துள்ளது.
ஈராக், சிரியாவின் பல பகுதிகளைக் கைப்பற்றி பெரும் தீவிரவாத இயக்கமாக ஐ.எஸ்.ஐ.எஸ். உருவாகி உள்ளது. அத்துடன் தாங்கள் கைப்பற்றிய பகுதிகளை இஸ்லாமிய தேசம் என அறிவித்து வருகிறது.
பிணைக் கைதிகளாக வெளிநாட்டவர் பலரையும் பிடித்து வைத்துக் கொண்டு பிணைத் தொகை கேட்டு மிரட்டுவதுடன் பணம் கொடுக்காவிட்டால் தலைகளை துண்டிக்கும் கொடூரச் செயல்களையும் இந்த இயக்கம் அரங்கேற்றி வருகிறது.
இந்த இயக்கத்தின் விஸ்வரூபமானது அரபு நாடுகளுக்கு மட்டுமின்றி உலக நாடுகளுக்கும் பேராபத்து என்று கருதி அமெரிக்கா தலைமையில் 30 நாடுகள் கை கோர்த்துள்ளன. தற்போது ஐ.எஸ்.ஐ.எஸ். நிலைகள் மீது ஈராக்கில் அமெரிக்கா வான் தாக்குதல் நடத்தி வருகிறது.
அமெரிக்காவுடன் இணைந்து பிரான்ஸ் விமானப் படை விமானங்களும் தாக்குதல் நடத்தியிருப்பதாக அந்நாட்டு அதிபர் அறிவித்துள்ளார்.