இஸ்ரேலின் இனப்படுகொலை.. காஸா பலி எண்ணிக்கை 1,100
காஸா: பாலஸ்தீனத்தின் காஸா மீது இஸ்ரேல் நிகழ்த்தி வரும் இனப்படுகொலையில் பலியானோர் எண்ணிக்கை 1,100ஆக அதிகரித்துள்ளது. படுகாயமடைந்தோர் எண்ணிக்கை 5,100. இவர்களில் 400க்கும் மேற்பட்டோர் ஆபத்தான நிலைமையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
காஸா பகுதிகள் மீது கடந்த 3 வார காலமாக இஸ்ரேல் உக்கிரமான போரை கட்டவிழ்த்துவிட்டுள்ளது. உலக நாடுகள் முன்னெடுத்த சமாதான முயற்சிகள் தோல்வி அடைந்தன.
இந்த உக்கிரப் போரில் அப்பாவி பாலஸ்தீன மக்கள் 1,100 பேர் பலியாகி உள்ளனர். 5,100 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 400க்கும் மேற்பட்டோர் உயிருக்குப் போராடி வருகின்றனர். சுமார் 2 லட்சம் பேர் அகதிகளாக சொந்த வாழ்விடங்களை விட்டு வெளியேறி முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர்.
இஸ்ரேலின் கொடூர தாக்குதலுக்கு பதிலடியாக ஹமாஸ் இயக்கத்தினர் நடத்திய தாக்குதலில் 52 இஸ்ரேல் வீரர்கள் பலியாகி உள்ளனர். இரண்டு முறை யுத்த நிறுத்த அறிவிப்பு வெளியிட்டும் போர் முடிவுக்கு வரவில்லை.
இரவும் பகலும் பாராமல் இஸ்ரேல் தொடர்ந்து வான்வழி மற்றும் தரைவழி தாக்குதல்களை நடத்தி வருகின்றன. இதனிடையே காஸா மீதான போர் தொடரும் என்று இஸ்ரேல் அறிவித்துள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.