காஸா மீதான இஸ்ரேல் தாக்குதல்: 828 பேர் பலி- 5,200 பேர் படுகாயம்; 1,70,000 பேர் அகதிகள்!!
காஸா: பாலஸ்தீனத்தின் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் மொத்தம் 828 பேர் பலியாகி உள்ளனர். 5,200 பேர் படுகாயமடைந்துள்ளனர். ஐ.நா. புள்ளி விவரங்களின்படி சுமார் 1 லட்சத்து 70 ஆயிரம் பாலஸ்தீனர்கள் அகதிகளாகி உள்ளனர்.
காஸா மீது வான்வழி மற்றும் தரைவழி தாக்குதல்களை கடந்த 18 நாட்களாக இஸ்ரேல் நடத்தி வருகிறது. தற்காலிகமாக அங்கு 12 மணி நேர யுத்த நிறுத்தம் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இஸ்ரேலின் தாக்குதலை முடிவுக்கு கொண்டுவர சர்வதேச நாடுகள் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
இஸ்ரேலின் கோரத்தாண்டவம்..
- கடந்த 18 நாள் தாக்குதலில் பலியான பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை 828.
- இஸ்ரேல் தாக்குதலில் இதுவரை மொத்தம் 5,200 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
- ஐக்கிய நாடுகள் சபையின் புள்ளி விவரப்படி மொத்தம் 1 லட்சத்து 70 ஆயிரம் பேர் அகதிகளாக இடம்பெயர்ந்துள்ளனர்.
- 4 பேர் முதல் 21 பேர் வரையிலான மொத்தம் 52 குடும்பங்கள் கூண்டோடு படுகொலை செய்யப்பட்டுள்ளன.
- காஸாவில் உள்ள ஹமாஸ் இயக்கம் மொத்தம் 65 ராக்கெட்டுகளை இஸ்ரேல் மீது கடந்த வியாழன்று வீசியது. இதில் 8 இஸ்ரேலிய வீரர்கள் கொல்லப்பட்டனர். இஸ்ரேல் தரப்பில் பலியானோர் எண்ணிக்கை 35. இதில் 32 பேர் ராணுவ வீரர்கள்.
- காஸாவில் மனிதாபிமான நிவாரணப் பணிகளுக்கு உதவுவதற்காக மொராக்கோவில் இருந்து 2 ராணுவ விமானங்கள் எகிப்தின் கெய்ரோவுக்கு வந்துள்ளன. இதேபோல் ஐக்கிய அரபு எமிரேட்ஸும் நிவாரணப் பொருட்களை அனுப்பி வைத்துள்ளன.
- புனித ரமலான் நோன்பை கடைபிடிக்க விடாமல் பாலஸ்தீன பகுதி மசூதிகள் மீதும் இடைவிடாமல் இஸ்ரேல் குண்டு மழை பொழிந்து வருகிறது.
யுத்த நிறுத்த முயற்சிகள்:
அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி புதிய யுத்த நிறுத்த ஒப்பந்தத்துக்கு ஏற்பாடு செய்து வருகிறது. இது இஸ்ரேலிய பிரதமரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
புதிய யுத்த நிறுத்த முயற்சியில் அமெரிக்கா, ஐநா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.