இஸ்ரேல் ராணுவ தாக்குதலுக்கு காஸாவில் பலியானவர்களின் எண்ணிக்கை 572 ஆக உயர்வு
காஸா: காஸாவில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை 572 ஆக அதிகரித்துள்ளது.
இஸ்ரேலுக்கும், அண்டை நாடான பாலஸ்தீனத்தில் உள்ள காஸாவை ஆளும் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கும் இடையே கடந்த 8ம் தேதி முதல் போர் நடந்து கொண்டிருக்கிறது. இதனால் இஸ்ரேல் ராணுவம் காஸாவில் விமானங்கள் மூலம் குண்டுகள் வீசித் தாக்குதல் நடத்தி வருகிறது. மேலும் கடந்த 2 நாட்களுக்கு முன்பில் இருந்து தரை வழியாகவும் இஸ்ரேல் ராணுவம் தாக்கி வருகிறது.
திங்கட்கிழமை நடந்த தாக்குதலில் 55 பேர் பலியாகினர். மேலும் அதற்கு முந்தைய நாள் நடந்த தாக்குதலில் இடிபாடுகளுக்குள் இருந்து 68 உடல்கள் மீட்கப்பட்டன. இதயைடுத்து இஸ்ரேல் தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை 572 ஆக அதிகரித்துள்ளது.
கொல்லப்பட்ட 55 பேரில் மூன்றில் ஒரு பங்கு பேர் குழந்தைகள் ஆவர். ரஃபாவில் இஸ்ரேல் வான் வெளித் தாக்குதல் நடத்தியபோது சேதம் அடைந்த ஒரு வீட்டில் 7 குழந்தைகள் உள்பட 9 பேர் பலியாகியுள்ளனர். மேலும் காஸா நகரில் உள்ள ஒரு வீடு தாக்கப்பட்டதில் 4 குழந்தைகள் பலியாகினர்.
காஸாவில் உள்ள குடியிருப்பு பகுதியில் நள்ளிரவில் நடந்த தாக்குதலில் 5 குழந்தைகள் உள்பட 11 பேர் பலியாகினர்.
இது தவிர 2 பதுங்கு குழிகளில் பதுங்கி இருந்த 10க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.