செளதி வந்திறங்கும் ஹஜ் பயணிகளுக்கு எபோலா பரிசோதனை
ஜெத்தா: ஜெத்தாவில் உள்ள மன்னர் அப்துல் அஜீஸ் சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கும் ஹஜ் பயணிகளுக்கு எபோலா பரிசோதனை செய்யப்படுவதுடன் தடுப்பு மருந்தும் அளிக்கப்படுகிறது.
சவுதி அரேபியாவின் ஜெத்தாவில் இருக்கும் மன்னர் அப்துல் அஜீஸ் சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கும் ஹஜ் பயணிகளுக்கு அதிலும் குறிப்பாக மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு எபோலா தாக்குதல் உள்ளதா என்று பரிசோதனை நடத்தப்படுகிறது. மேலும் அவர்களுக்கு எபோலா வைரஸ் தாக்குதல் ஏற்படாமல் இருக்க தடுப்பு மருந்து அளிக்கப்படுகிறது.
விமான நிலையத்தில் வந்திறங்கும் அனைத்து பயணிகளுக்கும் பரிசோதனை நடத்தப்படுகிறது என்று விமான நிலையத்தின் சுகாதார மைய தலைவர் அப்துல் கனி அல் மால்கி தெரிவித்துள்ளார். மேலும் எபோலா வைரஸ் தாக்குதல் உள்ளது என்று சந்தேகிக்கப்படுபவர்களை கையாள மருத்துவ குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன என்று அவர் தெரிவித்துள்ளார்.
மருத்துவ குழுக்கள் தெர்மல் கேமராக்களை பயன்படுத்தி எபோலா அறிகுறிகளை கண்டிறியும். அண்மையில் ஒருவருக்கு எபோலா தாக்குதல் இருக்கும் என்ற சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட அந்த நபரை பரிசோதனை செய்ததில் அவருக்கு எபோலா தாக்குதல் இல்லை என்பது தெரிய வந்தது.