ஜப்பானில் தீயாய் சுடும் சூரியன்... வெப்ப நோய்க்கு 15 பேர் பலி - 8,000 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதி!
டோக்கியோ: ஜப்பானில் வெப்ப நோய்க்கு இதுவரை 15 பேர் பலியாகியுள்ளதாகவும், சுமார் 8 ஆயிரத்திற்கும் அதிகமானோர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஜப்பானில் தற்போது கோடைக்காலம் நிலவி வருகிறது. கோடையின் தாக்கம் அதிகமாக இருப்பதால் மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
தகிக்கும் சூரியனால் வீட்டிற்குள்ளேயே பெரும்பாலான மக்கள் முடங்கிக் கிடக்கின்றனர். ஆனபோதும், அவர்களும் அதிக வியர்வையால் வெப்ப நோயாலும், தோல் நோயாலும் பாதிக்கப் பட்டுள்ளனர்.
பலி...
கடந்த சனிக்கிழமை மட்டும் வெயில் கொடுமைக்கு 6 பேர் இறந்துள்ளனர். இதுவரை வெப்ப நோய் பாதிக்கப்பட்டு பலியானவர்கள் எண்ணிக்கை 15ஐ தொட்டுள்ளது.
பாதிப்பு...
ஞாயிற்றுக்கிழமை வெப்ப நோயால் பாதிக்கப்பட்ட 8600-ற்கும் மேற்பட்ட பொதுமக்கள் அவசரப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளனர் என்று தீ மற்றும் பேரிடர் மேனேஜ்மென்ட் ஏஜென்சிஸ் தெரிவித்துள்ளது.
வயதானவர்கள்...
அதிலும் குறிப்பாக, வயதானவர்களும், குழந்தைகளுமே அதிகளவு வெப்பத்தின் கொடுமையை தாங்க இயலாமல் நோய்த்தாக்கத்திற்கு ஆளாகின்றனர்.
வானிலை ஆய்வு மையம்...
ஜப்பான் நாட்டின் வானிலை ஆய்வு மையம் பல பகுதிகளில் 34 டிகிரி (95 டிகிரி பாரன்ஹீட்)-க்கும் அதிகமான வெயில் தொடரும் என எச்சரித்துள்ளது. செவ்வாக்கிழமை (இன்று) 35 டிகிரிக்கு மேல் வெப்ப தாக்கம் இருக்கும் என்று ஜப்பான் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கடந்தாண்டு...
கடந்த வருட கோடை காலத்தில் 41 டிகிரி (105.8 பாரன்ஹீட்) வெப்பநிலை பதிவானது குறிப்பிடத்தக்கது.