அதிபர் தேர்தலில் ஹிலரி க்ளிண்டன் போட்டியா? புத்தாண்டில் முடிவு!
வாஷிங்டன்(யு.எஸ்): 2016ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடுவது குறித்து புத்தாண்டில் முடிவு செய்யப்போவதாக ஹிலரி க்ளிண்டன் தெரிவித்துள்ளார்.
2013ம் ஆண்டின் முக்கியமானவர்
ஏபிசி தொலைக்காட்சியின் '2013 ம் ஆண்டின் மிகவும் முக்கியமானவர்' நிகழ்ச்சியில் ஹிலரி க்ளிண்டன் தேர்வு செய்யப்பட்டு கலந்து கொண்டார். அவரிடம் 2016 ஆண்டின் அதிபர் தேர்தலில் போட்டியிடுவீர்களா என்ற கேள்விக்கு, அடுத்த ஆண்டு முடிவு செய்வதாக தெரிவித்தார்.
அமெரிக்காவில் அதிபர் பதவிக்கு பெண்கள் வெற்றிபெற வேண்டுமா? என்ற கேள்விக்கு ‘ நிச்சயமாக' ஆனால் அது எப்போது நிறைவேறும், யார் அந்த பெண்மணி என்று தனக்கு தெரியாது என்றும் கூறினார்.
அதிபர் பதவியில் போட்டியிடுமாறு பில் க்ளிண்டன் வலியுறுத்துகிறாரா என்ற கேள்விக்கு, தனக்கு எது பிடிக்குதோ அதை செய்யத்தான் அவர் வலியுறுத்துகிறார் என்றார்.
முதலிடத்தில் ஹிலரி
ஜனநாயகக் கட்சியினரின் ஏகோபித்த ஆதரவை பெற்ற தலைவராக ஹிலரி விளங்குகிறார். சமீபத்தில் நடந்த கருத்துக் கணிப்பில் 63 சதவீதத்தினர் ஹிலரி அதிபராக வர ஆதரித்து வாக்களித்துள்ளனர்.
ஏனைய தலைவர்களுக்கு 10 சதவீதத்திற்கும் குறைவான ஆதரவே கிடைத்துள்ளது. கட்சிக்குள் நடைபெறும் போட்டியில் (ப்ரைமரி) தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெறுவார் என நம்பப்படுகிறது.
2008 தேர்தலுக்கு முந்தய கட்சியினருக்குள்ளான போட்டியில் அதிபர் ஒபாமாவுக்கும் ஹிலரிக்கும் கடுமையான போட்டி நிலவியது குறிப்பிடத்தக்கது. தற்போது ஹிலரி களத்தில் இறங்கினால், அத்தகைய போட்டி ஏற்படும் சூழல் இல்லை.