லண்டனில் விருது வாங்கிய கையோடு பார்க்கிங் அபராதம் கட்டிய ஹிலாரி கிளிண்டன்
லண்டன்: லண்டனில், விருது விழாவுக்குச் சென்றிருந்த ஹிலாரி கிளிண்டன் தனது காரை முறையாக பார்க்கிங் செய்யாமல் சென்ற குற்றத்திற்காக அபராதம் விதிக்கப்பட்டார்.
முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டனின் மனைவியும், அமெரிக்காவின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சருமான ஹிலாரி கிளிண்டன் சமீபத்தில் இங்கிலாந்து நாட்டிற்கு சென்றிருந்தார்.
அங்கு வருக்கு விருது வழங்கி சிறப்பிக்கும் விழா ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அங்கு தான் இந்த ருசிகரச் சம்பவம் நடந்துள்ளது.
விருது வழங்கும் விழா....
லண்டனில் செயல்படும் சத்தாம் ஷவுஸ் நிறுவனம், அமெரிக்காவின் ராஜதந்திர செயல்பாடுகளில் ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்கியதற்காக ஹிலாரி கிளிண்டனைப் பாராட்டி விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றிற்கு ஏற்பாடு செய்திருந்தது.
முறையற்ற பார்க்கிங்....
மத்திய லண்டனில் உள்ள செயின்ட் ஜேம்ஸ் சதுக்கத்திற்கு அருகே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்ச்சிக்கு தனது பரிவாரங்களுடன் வந்தார் ஹிலாரி கிளிண்டன். தான் பயணம் செய்து வந்த மெர்சிடிஸ் காரை அருகில் நிறுத்திவிட்டு விழா நிகழ்ச்சிகளுக்குச் சென்றுவிட்டார் ஹிலாரி.
அபராதக் கட்டணம்....
பொதுவாக அங்கு காரை நிறுத்துவதற்கு ஒரு மணி நேரத்திற்கு 3.30 பவுண்டு கட்டணம் செலுத்தவேண்டும். ஆனால், அவருடன் வந்த யாரும் இந்தக் கட்டணத்தைச் செலுத்தவில்லை எனத் தெரிகிறது.
அபராதம் விதிப்பு....
விருது வாங்கிய பின், வெளியே வந்த ஹிலாரி காரில் ஏற முற்பட்ட போது, அங்கு காவலில் இருந்த போக்குவரத்துக் காவலர் 80 பவுண்டு அபராதம் செலுத்துமாறு கூறியுள்ளார்
அனைவருக்கும் ஒரே விதிதான்....
ஹிலாரியின் கார் அங்கு 45 நிமிடங்கள் நின்றிருந்ததாகவும், அதற்குரிய அபராதக் கட்டணமே இது என வெஸ்ட்மினிஸ்டர் நகரசபையின் உறுப்பினரான டேனியல் அஸ்டைர் கூறியுள்ளார். மேலும், உலக அளவில் பிரபலமானவராக இருப்பினும் அனைவருக்கும் விதிமுறைகள் பொதுவானவையே என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சலுகை....
அதோடு, இந்த அபராதத் தொகையை 14 நாட்களுக்குள் கட்டினால் இந்தத் தொகை பாதியாக அதாவது 40 பவுண்டாகக் குறைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளாது.