ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எப்படி கோடிக் கணக்கில் வருமானம் வருகிறது?
பாக்தாத்: எண்ணெய் கடத்தல், பணம் பறித்தல், திருட்டு, மனிதர்களை விற்பனை செய்வது மூலமாகத் தான் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு ஒரு நாளைக்கு ரூ.18 கோடிக்கு மேல் வருமானம் வருகிறதாம்.
ஈராக்கில் நாளுக்கு நாள் சக்திவாய்ந்த அமைப்பாக மாறி வருகிறது ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு. இந்த அமைப்பை ஒழித்துக் கட்ட அமெரிக்காவும், இங்கிலாந்தும் சூளூரைத்துள்ளன.
தீவிரவாத அமைப்பாக இருந்தாலும் அதன் ஒரு நாள் வருமானம் மட்டும் ரூ.18 கோடிக்கும் அதிகமாக உள்ளது.
எண்ணெய் வயல்கள்
ஈராக் மற்றும் சிரியாவில் ஐஎஸ்ஐஎஸ் கட்டுப்பாட்டில் 11 எண்ணெய் வயல்கள் உள்ளன. திருட்டு கும்பல்களை வைத்து எண்ணெய்யை விற்பனை செய்கிறது.
கடத்தல்
தீவிரவாதிகள் ஈராக்கில் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களை கடத்தி பணம் பறிக்கிறார்கள். இல்லை என்றால் அவர்களை கடத்தி விற்பனை செய்துவிடுகிறார்கள்.
எண்ணெய்
திருட்டு எண்ணெய் விற்பதில் மட்டும் தீவிரவாதிகளுக்கு நாள் ஒன்றுக்கு பல கோடி வருமானம் வருகிறதாம். எண்ணெய் மூலம் தான் தீவிரவாதிகளுக்கு முக்கிய வருமானம் வருகிறது. இது தவிர பழமை வாய்ந்த பொருட்களை கடத்தி துருக்கியில் விற்று பணம் பார்க்கிறார்கள்.
மொசுல்
ஈராக்கின் மொசுல் நகரை கைப்பற்றும் முன்பு தீவிரவாதிகள் மக்களை மிரட்டி பணம் பறித்து வந்துள்ளனர். ஆனால் நகரை கைப்பற்றிய பிறகு அங்கு உள்ள வங்கிகளில் இருந்து கோடிக்கணக்கில் பணத்தை திருடியுள்ளனர்.
பத்திரிக்கையாளர்கள்
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 4 பத்திரிக்கையாளர்கள் மற்றும் ஸ்பெயினைச் சேர்ந்த 2 பத்திரிக்கையாளர்களை கடத்தி வைத்துக் கொண்டு அவர்களை விடுவிக்க சம்பந்தப்பட்ட அரசுகளிடம் தீவிரவாதிகள் பணம் கேட்டனர். அந்த இரு நாட்டு அரசுகளும் பல கோடி ரூபாய் பணத்தை அளித்து பத்திரிக்கையாளர்களை மீட்டன.
பெண்கள்
பெண்கள் மற்றும் சிறுமிகளை கடத்தி அவர்களை செக்ஸ் அடிமைகளாக விற்பனை செய்வதன் மூலமும் தீவிரவாதிகளுக்கு பணம் கிடைக்கிறது.
பணக்கார அமைப்பு
உலக வரலாற்றிலேயே ஐஎஸ்ஐஎஸ் தான் பணக்கார தீவிரவாத அமைப்பு என்பது குறிப்பிடத்தக்கது.