ஒரு போதும் ராஜினாமா செய்யமாட்டேன்: நவாஸ் ஷெரீப் பிடிவாதம்!
இஸ்லாமாபாத்: இம்ரான்கான் மற்றும் காத்ரி ஆதரவாளர்களின் கோரிக்கையை ஏற்று ஒரு போதும் பதவியை ராஜினாமா செய்ய முடியாது என்று பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானில் கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் முறைகேடுகள் மூலம் நவாஸ் ஷெரீப் வெற்றி பெற்றார் என்பது இம்ரான்கான் மற்றும் காத்ரி ஆதரவாளர்களின் குற்றச்சாட்டு. இதற்காக நவாஸ் ஷெரீப் உடனே பதவி விலக வேண்டும் என்று கடந்த 3 வார காலமாக இஸ்லாமாபாத், லாகூர், கராச்சியில் பெரும் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
நாடாளுமன்றம் மீது தாக்குதல்
இந்தப் போராட்டங்களின் உச்சமாக நாடாளுமன்றம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. பிரதமர் நவாஸ் ஷெரீப் வீடு முற்றுகையிடப்பட்டது. பாகிஸ்தான் அரசு தொலைக்காட்சியான பி டிவி சூறையாடப்பட்டது. இந்த மோதல்களில் 8 பேர் பலியாகி உள்ளனர். 500க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.
ராணுவம் எச்சரிக்கை
இந்நிலையில் அந்நாட்டு ராணுவம், ஜனநாயக ரீதியில்தான் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்றும் கிளர்ச்சியாளர்கள் மீது தாக்குதல் நடத்தக் கூடாது என்றும் எச்சரித்திருக்கிறது.
அரசியல் கட்சித் தலைவர்கள் கூட்டம்
இதனிடையே அந்நாட்டின் அரசியல் கட்சித் தலைவர்களிடையே நேற்று உரையாற்றிய பிரதமர் நவாஸ் ஷெரீப், நாங்கள் அரசியல் சாசனத்தின் கீழ்தான் ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறோம். சிலர் கோரிக்கை விடுப்பதற்காக ஒருபோதும் பதவியை ராஜினாமா செய்யவும் முடியாது. பதவியை விட்டு விலகி விடுப்பில் செல்லவும் போவதில்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
நவாஸ் மீது நம்பிக்கை
இந்த அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் முடிவில் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில், நாடாளுமன்றத்தின் மீது கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியிருப்பது ஜனநாயகத்தின் மீதான தாக்குதல். ஜனநாயகத்தைப் பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளையும் பிரதமர் நவாஸ் ஷெரீப் மேற்கொள்வார் என்று நாங்கள் நம்புகிறோம்.
உச்சநீதிமன்றத்தில்...
நாடாளுமன்றமே நாட்டில் அதிகாரம் படைத்த ஒன்று என்று உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கில் அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களையும் வழக்கில் சேர்த்துக் கொள்ள மனுத்தாக்கல் செய்ய இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.