உங்கள் செல்போனில் 'சார்ஜ்' இல்லாவிட்டால் அமெரிக்காவுக்குள் கொண்டு செல்ல முடியாது
நியூயார்க்: சார்ஜ் இல்லாத செல்போன்கள் அமெரிக்காவுக்குள் அனுமதிக்கப்பட மாட்டாது என்று அமெரிக்க விமான நிலைய தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
அல் கொய்தா தீவிரவாத அமைப்பின் குண்டு தயாரிக்கும் நபர் விமான நிலைய ஸ்கேனர்களில் சிக்காத வகையில் வெடிகுண்டை தயாரித்து வருவதை அமெரிக்க உளவு நிறுவனமான சிஐஏ அண்மையில் கண்டுபிடித்தது.
இதையடுத்து அமெரிக்க விமான நிலையங்களுக்கு இந்த தகவல் தெரிவிக்கப்பட்டது.
போன்
சார்ஜ் போடாத செல்போன்கள், லேப்டாப்களை விமானங்களில் எடுத்துச் செல்ல அமெரிக்கா தடை விதித்துள்ளது.
வெடிகுண்டு
வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளின் செல்போன்களில் சார்ஜ் உள்ளதா என்று விமான நிலைய அதிகாரிகள் பரிசோதனை செய்வார்கள். சார்ஜ் இல்லாத போன்கள் வெடிகுண்டுகளாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
இங்கிலாந்து
இங்கிலாந்தின் ஹீத்ரூ, மான்செஸ்ட்ர் மற்றும் கேட்விக்கில் இருந்து அமெரிக்கா கிளம்பும் பயணிகள் விமானத்தில் ஏறும் முன்பு அவர்களின் செல்போனில் சார்ஜ் உள்ளதா என்று பரிசோதனை செய்யப்படும் என்று பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளர்.
அனுமதி மறுப்பு
யாராவது செல்போனில் சார்ஜ் இல்லாமல் வைத்திருந்தால் அவர்கள் அமெரிக்காவுக்கு விமானம் மூலம் செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
தாக்குதல்
தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்று அஞ்சப்படுவதால் ஐரோப்பா, மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்காவில் உள்ள 100 விமான நிலையங்களில் பாதுகாப்பை பலப்படுத்துமாறு அமெரிக்கா கடந்த வாரம் கேட்டுக் கொண்டுள்ளது.
தீவிரவாதி
அல் கொய்தா அமைப்பின் இப்ராஹிம் அல் அசிரி தயாரித்த குண்டுகள் மெட்டல் டிடெக்டர்கள், பாடி ஸ்கேனர்களில் சிக்காத அளவுக்கு அவை கச்சிதமாக செய்யப்பட்டுள்ளதாக சிஐஏ அதிகாரிகள் நம்புகிறார்கள்.
ஏமன்
ஏமனில் உள்ள அல் கொய்தா அமைப்பில் நூற்றுக்கணக்கான இங்கிலாந்து குடிமகன்கள் உள்ளனர். அதனால் தான் இங்கிலாந்தில் இருந்து கிளம்பும் பயணிகளுக்கு இந்த புதிய கட்டுப்பாடு ஆகும்.