அரசுடன் பேச்சை திடீரென நிறுத்தினார் இம்ரான் ... நவாஸ் விலகும் வரை போராடப் போவதாக அறிவிப்பு
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் அரசுடன் நடத்தி வந்த பேச்சுவார்த்தையை இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சி நிறுத்தி விட்டது. ஷெரீப் விலகும் வரை இந்த இடத்தை விட்டு நான் அகலப் போவதில்லை என்றும் இம்ரான் கான் கூறி விட்டார்.
நவாஸ் ஷெரீப் பதவி விலகியே ஆக வேண்டும் என்றும் அவர் திட்டவட்டமாக கூறியுள்ளார். இதனால் இஸ்லாமாபாத் முற்றுகை மீ்ண்டும் சூடு பிடித்துள்ளளது.
நேற்று மரியாட் ஹோட்டலில் வைத்து முதல் சுற்றுப் பேச்சுவார்த்தை நடந்தது. இன்று 2வது சுற்றுப் பேச்சுவார்த்தை நடப்பதாக இருந்தது. ஆனால் தற்போது இந்தப் பேச்சுக்களை நிறுத்தச் சொல்லி விட்டார் இம்ரான் கான்.
மேலும் நாடாளுமன்றம் முன்பு கூடியுள்ள தொண்டர்கள் மத்தியில், ஒரு கன்டெய்னர் மீது ஏறி நின்றபடி அவர் பேசினார். அப்போது அவர் கூறுகையில், போராட்டம் நடத்தி வரும் மக்களை தாக்குமாறு பிறப்பிக்கப்பட்ட உத்தரவை நிறைவேற்றத் தவறியதாக கூறி ஐஜி அப்தாப் சீமா என்பவர் நீக்கப்பட்டுள்ளார். இதை வன்மையாக கண்டிக்கிறேன்.
இங்கு போராடி வரும் மக்கள் மீது போலீஸார் தாக்குதல் நடத்தினால் பின்விளைவுகள் பயங்கரமாக இருக்கும். எங்களைத் துப்பாக்கியால் சுட்டால் நான் முதலில் வந்து குண்டுகளை வாங்கிக் கொள்வேன்.
நவாஸ் ஷெரீப் விலகியே தீர வேண்டும். அதில் பேச்சுவார்த்தைக்கே இடமில்லை. சமரசத்திற்கே இடமில்லை என்றார் இம்ரான் கான்.