சிரியாவை அதிர வைக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ்.ன் 'அல் கன்சா பெண்கள் படை"
ரக்கா: சிரியாவில் இஸ்லாமிய சட்டத்தை பெண்கள் கடைபிடிக்கிறார்களா என்பதை கண்காணிக்க சன்னி முஸ்லிம்களின் ஆயுத அமைப்பான ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தில் 'பெண்கள் படையணி' உருவாக்கப்பட்டுள்ளது.
சன்னி முஸ்லிம்களின் ஆயுதப்படையான ஐ.எஸ்.ஐ.எஸ். சிரியாவின் ரக்கா உள்ளிட்ட நகரங்களையும் ஈராக்கில் மொசூல் உள்ளிட்ட நகரங்களையும் கைப்பற்றி தனிதேசமாக பிரகடனப்படுத்தி உள்ளது.
அல் கன்சா
சிரியாவில் தற்போது ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தின் பெண்கள் படையணி உருவாக்கப்பட்டு களமிறக்கப்பட்டுள்ளது. இதற்கு 'அல் கன்சா' என்று பெயரிடப்பட்டுள்ளது.
என்ன பணி?
ஷரியத் சட்டத்தை இஸ்லாமிய பெண்கள் முழுமையாக கடைபிடிக்கிறார்களா? என்பதுதான் இந்த பெண்கள் படையணியின் முதன்மைப் பணிகளில் ஒன்று.
பெண்கள் மட்டுமே..
இது குறித்து ரக்காவில் ஐ.எஸ்.ஐ.எஸ். -ன் தளபதிகளில் ஒருவரான அபு அகமது கூறுகையில், பெண்களுக்கு என்று தனி படையணி உருவாக்கப்பட்டுள்ளது. அந்தப் படைப் பிரிவில் சேருவோருக்கு தனியே அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளன.
பெண்களை கண்காணிக்க
கடந்த மாதம் ஈராக்கின் மொசூல் உள்ளிட்ட நகரங்களைக் கைப்பற்றிய பின்னர்தான் இப்படையணி உருவாக்கப்பட்டது. இஸ்லாத்தை முழுமையாக பெண்கள் கடைபிடிக்க விழிப்புணர்வு ஏற்படுத்துதல், அப்படி கடைபிடிக்காத பெண்களை கைது செய்து தண்டித்தல் ஆகியவற்றை இந்த படையணி மேற்கொள்ளும்.
போராளிகளின் மனைவிகளும்..
இந்தப் படையணியில் தற்போது ரக்கா நகரைச் சேர்ந்த பெண்களோ அல்லது சிரியாவின் இதர பகுதிகளில் உள்ள ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தில் உள்ள முஜாஹிதீன்களின் மனைவியரோ இணைந்து கொள்ளலாம் என்றும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்றார்.
பெண் படையணியின் சிறையில்..
அண்மையில் இந்த படையணியால் கைது செய்யப்பட்ட ஜைனாப் என்ற இளம்பெண் கூறுகையில், நான் தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தேன். அப்போது வாகனத்தில் சென்று கொண்டிருந்த ஆயுதமேந்திய பெண்கள் படை திடீரென என்னை சுற்றி வளைத்து கைது செய்தது. பின்னர் அவர்களது இடத்துக்கு கொண்டு சென்று ஒரு அறையில் அடைத்து வைத்தனர்.
எச்சரித்து விடுவிப்பு
என்னிடம் இஸ்லாமிய வழிபாடு, நோன்பு குறித்து கேள்விகளை துப்பாக்கி முனையில் கேட்டனர். பின்னர் தெருவில் தனியாக நடந்து சென்றதாலும் இஸ்லாம் பெண்களுக்குரிய உடையை முறையாக அணியாத காரணத்தாலுமே என்னை கைது செய்ததாக கூறினர். பின்னர் எச்சரித்து விடுதலை செய்தனர். ஆறு மணி நேரம் அவர்களது சிறையில் இருந்தேன் என்கிறார்.
அச்சுறுத்துகிறதா?
ஆனால் மனித உரிமை செயற்பாட்டாளர்களோ பெண்களை அச்சுறுத்தும் வகையில் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கம் நடந்து கொள்கிறது என்றும் குற்றம்சாட்டுகின்றனர்.