அமெரிக்க வாழ் இந்திய கவிஞர் விஜய் சேஷாத்ரிக்கு 'புலிட்சர் பரிசு'
அமெரிக்காவில் பத்திரிக்கை, இலக்கியம், நாடகம் மற்றும் இசை ஆகிய பிரிவுகளில் சிறந்து விளங்குவோருக்கு ஆண்டுதோறும் உயரிய விருதான புலிட்சர் பரிசு வழங்கப்படும். இந்த ஆண்டுக்கான பரிசை கொலம்பியா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
அதன்படி 3 பிரிவுகள் என்ற கவிதைத் தொகுப்புக்காக கவிதை பிரிவுக்கான புலிட்சர் பரிசு அமெரிக்க வாழ் இந்தியரான விஜய் சேஷாத்ரிக்கு கிடைத்துள்ளது. 1954ம் ஆண்டு கர்நாடக மாநிலம் பெங்களூரில் பிறந்த விஜய் தனது 5வது வயதில் அமெரிக்கா சென்றார். அதில் இருந்து அவர் அங்கு தான் வசித்து வருகிறார். அவர் ஒஹாயா மாநிலத்தில் உள்ள கொலம்பஸில் வளர்ந்தவர்.
அவர் தற்போது நியூயார்க்கில் உள்ள சாரா லாரன்ஸ் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.
புலிட்சர் பரிசை பெறும் 5வது அமெரிக்க வாழ் இந்தியர் விஜய். முன்னதாக 1931ம் ஆண்டில் கோபிந்த் பெஹரி லால், 2000ம் ஆண்டில் ஜும்பா லாஹரி, 2003ம் ஆண்டில் கீதா ஆனந்த், 2011ம் ஆண்டில் சித்தார்த்த முகர்ஜி ஆகியோருக்கு புலிட்சர் பரிசு கிடைத்துள்ளது.